மனநிலையை மேம்படுத்தும் 5 சிறந்த வழிகள்!
By DIN | Published On : 26th November 2020 02:14 PM | Last Updated : 26th November 2020 02:55 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது குறித்து நம் முன்னோர்கள், வீட்டிலுள்ள முதியோர், பெற்றோர்கள் நமக்கு தொடர்ந்து அறிவுரை வழங்கக் கேட்டிருப்போம். ஆனால், தற்போது பெரும்பாலானோர் மனநலப் பிரச்சனைகளுடன்தான் வாழ்ந்து வருகின்றனர். இதனால் அவர்களது உடல்நிலையிலும் பாதிப்பு ஏற்படுகிறது.
மனநிலையைப் பாதிக்கும் காரணிகளை மாற்றியமைக்கும் முயற்சியில் தற்போது பலர் ஈடுபட்டுள்ளனர். உடல் ஆரோக்கியத்துடன் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். உடல்நலத்தைப் போலவே மனநலத்தையும் தொடர்ச்சியாக பேணுவது அவசியம் என்று கூறும் மனநலப் பயிற்சியாளர் காஞ்சன் ராய் மனநலனை மேம்படுத்தும் 5 வழிகளைக் கூறுகிறார்.
மன அழுத்தத்தைக் குறைக்கும் பயிற்சிகள்
உணர்ச்சிகளின் மூலமாக மன அழுத்தத்தை வெளிப்படுத்திவிட வேண்டும். மேலும், மன அழுத்தத்தைக் குறைக்கும் சில எளிய பயிற்சி முறைகளை மேற்கொள்ள வேண்டும்.
தியானம், யோகா, மூச்சுப்பயிற்சி, தசைப்பயிற்சி உள்ளிட்டவைகளை மேற்கொள்வது உங்கள் உடல்நிலையையும், மனநிலையையும் மேம்படுத்த உதவும்.
ஆரோக்கியமான உணவு
மூளையின் சிறந்த செயல்பாட்டுக்கு ஆரோக்கியமான உணவுகள் அவசியம். உணவில் பச்சைக் காய்கறிகள், தானியங்கள், பருப்பு வகைகள், கடல் உணவுகள் மற்றும் மெல்லிய இறைச்சி ஆகியவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இந்த உணவுகள் மெக்னீசியம், ஃபோலேட், துத்தநாகம் மற்றும் முக்கிய கொழுப்பு அமிலங்களை உள்ளடக்கியது. இவை பெருமூளை செயல்பாட்டை துரிதப்படுத்துகின்றன. பாலிபினால்கள் நிறைந்த ஒயின், டார்க் சாக்லேட்டுகள், பெர்ரி போன்றவையும் முக்கியம்.
உடற்பயிற்சி
உடற்பயிற்சிகள் மூலமும் மனநலனை மேம்படுத்த முடியும். சமூகத் தொடர்பு மற்றும் இயற்கையின் வெளிப்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய உடல்நல செயல்பாடுகள் மனநலனுக்கு உதவக்கூடும்.
உதவியை நாடுங்கள்
வாழ்க்கையின் சில இக்கட்டான சூழ்நிலைகளிலிருந்து வெளியே வர நமக்கு சிலரின் உதவி தேவைப்படும். அம்மாதிரியான சூழ்நிலையில் உங்களுக்கு வேண்டியவரின் உதவியை நாட யோசிக்காதீர்கள். இந்த நேரத்தில் உங்களுக்கு ஆறுதலாக இருப்பது அவர்களின் கடமை. நம்பிக்கையான ஒருவரிடம் உங்கள் பிரச்னைகளை கூறி அதற்குத் தீர்வு காணுவதன் மூலம் மன அழுத்தம் குறையும்.
தூக்கத்திற்கு முக்கியத்துவம்
உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு அளிப்பது அவசியம். அந்த வகையில், தூக்க முறைகளை மேம்படுத்த வேண்டும். தூக்கத்தை கெடுக்கும் உணவுகளை தவிர்த்துவிட வேண்டும். இரவில் மின்னணு சாதனங்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இரவில் சீக்கிரமாக தூங்கிவிட்டு அதிகாலையில் எழும் பழக்கத்தை கொண்டிருக்க வேண்டும்.
ஆனால், தூக்கத்தை கட்டாயப்படுத்தி வரவைக்காதீர்கள். படுக்கைக்குச் சென்று சுமார் 20 நிமிடங்கள் உங்களால் தூங்க முடியாவிட்டால் எழுந்து, மூளைக்கு வேலை கொடுக்கக்கூடிய ஏதேனும் ஒரு செயலில் ஈடுபடுங்கள். இதனால் மூளை சோர்வடைந்து தூக்கம் எளிதில் வரும்.
ஆழ்ந்த தூக்கத்தைப் பெறுவதற்கு மற்றுமொரு முக்கிய வழி ஒளி வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்துவதாகும். வீட்டில் மின் மற்றும் மின்னணு சாதனங்களிலிருந்து வெளிப்படும் ஒளி குறைவாக இருப்பதை உறுதி செய்யுங்கள். இது தூக்கத்திற்கு உதவும் மெலடோனின் உமிழ்வை அதிகரிக்கும். மன அழுத்தத்தை சீராக்க தரமான தூக்கத்தைப் பெறுவது முக்கியமானது. தூக்கம் மன ஆரோக்கியத்தை மறைமுகமாக சரி செய்கிறது.