அதிக நேரம் தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதைத் தவிர்ப்பதன் மூலம் இதய நோய்களால் பாதிக்கப்படுவதிலிருந்து தப்பிக்கலாம் என கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வானது கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தினால் கிட்டத்தட்ட 13 ஆண்டுகளில் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்கள் ஒரு நாளைக்கு 1 மணி நேரத்திற்கும் குறைவாக மட்டுமே தொலைக்காட்சியினைப் பார்க்க அறிவுறுத்தப்பட்டனர்.
அதிக நேரம் தொலைக்காட்சியினைப் பார்ப்பவர்களில் 16 சதவிகிதம் பேர் இதய நோயினால் அதிக அளவு பாதிக்கப்படுவது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அதிக நேரம் தொலைக்காட்சியினைப் பார்க்கும் போது இதயக் குழாய்களில் கொழுப்பு அடைப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக இதயத்திற்கு செல்லும் ரத்தத்தின் பாதை குறுகாலகிறது. அவர்களுக்கு இதய நோயின் அபாயமும் அதிகமாகிறது. தொலைக்காட்சிக்கான நேரத்தினை குறைப்பதன் மூலம் இதனைத் தவிர்க்கலாம்.
இந்த ஆய்வில் உட்படுத்தப்பட்டவர்களுக்கு இதய நோய் எதுவும் இல்லை. ஆனால், அவர்கள் அதிக நேரம் தொலைக்காட்சி பார்த்ததற்கு பின்பு அவர்களது தரவுகளை சோதித்ததில் இதய நோயினால் பாதிப்படைவதற்கான அபாயம் அவர்களில் அதிகரித்துள்ளது தெரிய வந்தது.
இந்த ஆய்வின் முடிவில் தொடர்ந்து நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது. அதிக நேரம் தொலைக்காட்சி பார்க்கும் பழக்கம் இருப்பவர்களாக இருந்தால் அடிக்கடி எழுந்து நடக்க வேண்டும். அதே போல சிப்ஸ் (chips) போன்ற நொறுக்குத் தீனிகள் மற்றும் சாக்லேட் உண்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதய நோய்க்கான பொதுவான அறிகுறிகள் நெஞ்சுவலி மற்றும் மூச்சு விடுவதில் சிரமம். அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பது இவை இரண்டையும் அதிகப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.