நரம்பு சுருட்டல் நோயை குணப்படுத்த முடியும்! அதுபற்றிய மூடநம்பிக்கையை?

நரம்பு சுருட்டல் நோய் பற்றி பல மூட நம்பிக்கைகள் சமுதாயத்தில் உளவி வருவதால், நோய் பாதித்தவர்கள் சிகிச்சை பெற முன்வருவதும், அதிலிருந்து குணமடைவதும் பாதிக்கப்படுகிறது.
நரம்பு சுருட்டல் நோயை குணப்படுத்த முடியும்
நரம்பு சுருட்டல் நோயை குணப்படுத்த முடியும்


கோவை: நரம்பு சுருட்டல் நோய் பற்றி பல மூட நம்பிக்கைகள் சமுதாயத்தில் உளவி வருவதால், நோய் பாதித்தவர்கள் சிகிச்சை பெற முன்வருவதும், அதிலிருந்து குணமடைவதும் பாதிக்கப்படுகிறது.

கோவையிலிருக்கும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, நரம்பு சுரட்டல் நோய் குறித்தும், அதன் சிகிச்சை முறைகள் குறித்தும் விரிவான விளக்கத்தை வெளியிட்டுள்ளது. 

இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தில் வெளியாகியிருக்கும் கட்டுரையில் தெரிவித்திருப்பதாவது, 

உடலில் நரம்பு மண்டலம், மிக அரிதானப் பணியை செய்கிறது. அதுவும் கால் பகுதியிலிருக்கும் நரம்புப் பகுதி. காலிலிருந்து இரத்தத்தை இதயத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். புவியீர்ப்பு சக்திக்கு எதிராக இப்பணியை அது மேற்கொள்கிறது. 

இந்த நரம்புகளில், இரத்த ஓட்டத்தை ஒரு வழிப் பாதையாக மாற்றும் வால்வுகள் அமைந்துள்ளன. இவை, ரத்தம் நரம்புகளில் கீழ்நோக்கி வடிவதைத் தடுக்கின்றன. ஒரு வேளை, இந்த வால்வுகள் பலவீனமடைந்துவிட்டால் தனது வேலையை சரிவர செய்ய முடியாமல், ரத்தம் நரம்புகளின் வழியாக பயணிக்கும் போது கீழ்நோக்கி பாயும் அபாயத்தை ஏற்படுத்தும். அது நரம்புகளில் சில இடங்களில் தங்கிவிடும். இவ்வாறு நாள்பட்டு ரத்தம் நரம்புகளில் தங்கும்போது, அது தோலுக்கு மேலே, நரம்புகள் புடைத்தபடி சுருள் சுருளாக சுற்றியவாறு பச்சை அல்லது கருப்பு நிறத்தில் ரத்தம் நின்றிருக்கும் வகையில் தெரிய ஆரம்பிக்கும்.

இதுவே நரம்பு சுருட்டல் நோயாகும். இந்த நோய்க்கு பல அறிகுறிகள் உள்ளன. இது நபருக்கு நபர் மாறுபடும். ஆனால் பெரும்பாலானோருக்கு இந்த அறிகுறிகள் தென்படும்.

  • கால் நரம்புகளில் பச்சை அல்லது கரும்பச்சை நிறத்தில் நரம்புகள் தெரிவது.
  • சுருள் சுருளாக காலின் கீழ் பகுதியில் நரம்புகள் தெரிவது.
  • நீண்ட நேரம் நின்று கொண்டிருக்கும் போது அதிக கால்வலி.
  • கால்களில் அரிப்பு
  • கால்களில் அரிப்புடன் புண்கள் தோன்றுவது.
  • சில நேரங்களில் அரிப்புடன் கால்களின் நிறம் மாறுவது.

ஆனால், இந்த நரம்பு சுருட்டல் நோய் குறித்து பல மூட நம்பிக்கைகள் நிலவி வருகிறது. அதுவே நோயாளிகள் சிகிச்சைக்கு வராமல் தடுத்துவிடுகிறது.

நரம்பு சுருட்டல் நோய் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாவிட்டாலும் வாழ்முறையை மிக மோசமாக பாதித்துவிடுகிறது.

இந்த நோய்க்கான சிகிச்சை முறை, சரியான நோயறிதலில் தொடங்கி, எந்த விதமான சிகிச்சை அளிப்பது என்பதில் இணைந்து, அறுவை சிகிச்சை, லேசர், ரேடியோகதிர்வீச்சு, அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட வெனாசீல் போன்ற சிகிச்சைகளில் சரியானவொன்றை தேர்ந்தெடுத்து சிகிச்சையளித்து குணப்படுத்த முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

நரம்பு சுருட்டல் நோய், சிகிச்சை பெற்று குணமடைந்தாலும், மீண்டும் வரும் என்பது ஒரு மூடநம்பிக்கை என்று இந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறையாக நோயை கண்டறிந்து உரிய சிகிச்சை அளித்து, சிகிச்சைக்குப் பிறகு சரியான பயிற்சிகளை மேற்கொண்டால் பெரும்பாலானோருக்கு மீண்டும் நரம்பு சுருட்டல் ஏற்படாது. மருத்துவர்கள் கொடுக்கும் அறிவுறுத்தல்களை நோயாளிகள் சரியாக பின்பற்ற வேண்டும். சிகிச்சை அளித்து நோய் மீண்டும் வருவதற்கான அபாயம் 0.5 சதவீதம் மட்டுமே உள்ளது. 

நரம்பு சுருட்டல் பொதுவாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது, இதற்கு சிகிச்சை தேவையில்லை என்றே பலரும் நினைக்கிறார்கள். ஆனால், லேசான வலி அல்லது பாதிப்பு தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையை நாட வேண்டும். எவ்வளவு விரைவாக வருகிறோமோ, அவ்வளவு விரைவாக குணமடையலாம்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டுமா?
நரம்பு சுருட்டல் நோய்க்கு சிகிச்சை பெற்றால் அன்றைய தினமே வீட்டுக்குச் செல்லலாம். மூன்று நாள்களுக்கு ஓய்வு பரிந்துரைக்கப்படும்.  மூன்று வாரங்களுக்கு நீண்ட பயணங்கள் தவிர்க்கப்படவேண்டும் என்கிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com