பாதி திரவ வடிவிலான ஷாம்புகளை மட்டுமே நாம் அறிந்திருப்போம். உலர் ஷாம்புகள் என்பதை, தற்போது யூனிலிவரின் உலர் ஷாம்புகள் திரும்பப் பெறும் செய்திகள் மூலமாகத்தான் பலரும் அறிந்திருப்பார்கள்.
2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்குள் தயாரிக்கப்பட்ட யூனிலிவரின் டவ், நெக்ஸஸ், சாவே, டிகி, டிரெஸெம்மி உள்ளிட்ட மிகவும் பிரபலமான உலர் ரக ஷாம்புகளை திரும்பப்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. சென்னைக்கு சம்பவம் காத்திருக்கு.. தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை
இதனால், அமெரிக்கா உள்ளிட்ட உயர்ந்த நாடுகளில் இதனை பயன்படுத்தி வந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காரணம், இந்த உலர் ஷாம்புவில் கலந்திருக்கும் அதிகப்படியான பென்சென்னே என்ற வேதிப்பொருள் புற்றுநோய் அல்லது ரத்தத்தில் மாறுபாடுகளை உருவாக்கும் அபாயம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அது என்ன உலர் ஷாம்பு?
உலர் ஷாம்பு என்பது நாம் பயன்படுத்தும் திரவ ஷாம்புகளைப் போல அல்ல. அவை பவுடர்களாகவோ அல்லது ஸ்ப்ரே வடிவிலோ இருக்கும். அதனை பயன்படுத்துவதற்கு தலைக்கு குளிக்க வேண்டிய அவசியமில்லை. தலையில் அப்படியே பயன்படுத்திக் கொள்ளலாம். தலையை சுத்தம் செய்ய அது போதுமானது.
இந்த பவுடர்கள் மற்றும் ஸ்ப்ரே போன்றவற்றை, பயன்படுத்துவோர் தங்களது தலை முடியின் நிறத்துக்கு ஏற்ப நிறத்துகள்கள் அடங்கியதை தேர்வு செய்து வாங்கிக் கொள்ளலாம்.
இந்தியாவில் விற்பனையாகிறதா?
இந்த உலர் ரக ஷாம்புகள் அமேஸான் மற்றும் நைகா போன்ற இ-வர்த்தக நிறுவனங்கள் மூலம் இந்தியாவிலும் விற்பனை செய்யப்படுவதாக ஆங்கில ஊடக செய்தி தெரிவிக்கிறது.
இந்த உலர் ரக ஷாம்புகள் என்று மட்டுமல்ல.. ஏதேனும் உருவில் நாம் அன்றாடம் இந்த பென்ஸென் வேதிப்பொருளை பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம். குறிப்பாக இந்த உலர் ரக ஷாம்புகளில் கலந்திருப்பது சொல்லப்போனால் அளவில் சிறியதுதான் என்றும் கூறுகிறார்கள் நிபுணர்கள்.
உலர் ரக ஷாம்புகள் நல்லதா?
உலர் ரக ஷாம்புகளை மிகவும் அவசியம் என்றாலோ எப்போதாவது ஒரு முறையோ பயன்படுத்தலாம் என்றும், தொடர்ச்சியாக தலைமுடியை சுத்தம் செய்ய திரவ ஷாம்புகளை பயன்படுத்துவதே சிறந்தது என்று கூறப்படுகிறது.
உலர் ஷாம்புகள் தலைப் பகுதியில் சில எச்சங்களை விட்டுவிடும். அவை தொடர்ந்து அலசாமல் விட்டுவிடும்போது தலையில் எரிச்சல், பொடுகு போன்ற பாதிப்புகள் ஏற்படக் காரணமாகிவிடும்.