கோடை வெயிலில் இருந்து தப்பிக்க.. இதையெல்லாம் கண்டிப்பா செய்யுங்க..!

கோடை வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள உடல் வெப்பநிலையை சீராக வைத்துக்கொள்ள கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள். 
கோடை வெயிலில் இருந்து தப்பிக்க.. இதையெல்லாம் கண்டிப்பா செய்யுங்க..!

தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பெரும்பாலான முக்கிய நகர்ப் பகுதிகளில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி பதிவாகி வருகிறது. 

இன்னும் ஒரு சில நாள்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும், இயல்பை விட 2-4 டிகிரி செல்ஸியஸ் அதிகரிக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதையடுத்து பிற்பகல் நேரங்களில் வெளியில் வர வேண்டாம் என்று அரசும் அறிவுறுத்தி வருகிறது. 

இந்நிலையில் கோடை வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள உடல் வெப்பநிலையை சீராக வைத்துக்கொள்ள கீழ்குறிப்பிட்டவற்றை கடைப்பிடியுங்கள். 

♦ வெயில் அதிகமுள்ள நேரங்களில், குறிப்பாக மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெயிலில் செல்வதைத் தவிர்க்கவும்.

♦ தாகமாக இல்லாவிட்டாலும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும், முடிந்தவரை எவ்வளவு தண்ணீர் குடிக்க முடியுமோ அருந்துங்கள். ஏனெனில் இந்த நேரத்தில் உடலில் நீர் இழப்பு அதிகம் இருக்கும். அதை சமன் செய்ய தண்ணீர் குடிப்பது அவசியம்.

♦ இலகுரக, வெளிர் நிற, தளர்வான மற்றும் நுண்துளைகள் நிறைந்த பருத்தி ஆடைகளை அணியுங்கள். 

♦ வெயிலில் வெளியே செல்லும்போது பாதுகாப்புக் கண்ணாடிகள், குடை, தொப்பி, காலணிகளைப் பயன்படுத்தவும்.

♦ வெளியில் வெப்பநிலை அதிகமாக இருக்கும்போது கடினமாக வேலை செய்வதைத் தவிர்க்கவும். மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை வேலை செய்ய நேர்ந்தால், தொப்பி அல்லது தலை, கழுத்து, முகம் மற்றும் கைகால்களில் துணி அல்லது உறைகளைப் பயன்படுத்தலாம். 

♦ கண்டிப்பாக வெளியில் செல்லும்போது தண்ணீர் பாட்டில், கைக்குட்டை ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். 

♦சாலைகளில் அல்லது வெளியில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகளையோ செல்லப்பிராணிகளையோ விட்டுவிட வேண்டாம். 

♦ மயக்கம் ஏற்பட்டாலோ அல்லது நோய்வாய்ப்பட்டாலோ, உடனடியாக மருத்துவரை அணுகவும். 

♦ ஓஆர்எஸ் பொடி, வீட்டில் தயாரிக்கப்பட்ட லஸ்ஸி,  எலுமிச்சை நீர், மோர் ஆகியவற்றை தொடர்ந்து அருந்துங்கள். இளநீர், பழச்சாறுகளையும் குடியுங்கள். இது உடலை நீரேற்றம் செய்ய உதவுகிறது. நீர்ச்சத்து மிக்க காய்கறிகளையும் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். 

♦ உங்கள் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க முற்படுங்கள். திரைச்சீலைகள், ஷட்டர்கள், சூரிய ஒளி உட்புக விடாமல் தடுக்கும் சன் ஷேடு ஆகியவற்றைப் பயன்படுத்தவும். இரவில் ஜன்னல்களைத் திறந்து வையுங்கள். 

♦ குளிர்ந்த நீரில் நாள் ஒன்றுக்கு இருமுறையாவது குளிக்கவும். முகத்தை அடிக்கடி கழுவ வேண்டும். 

♦ வெளியில் செல்லும்போது பொதுவாகவே முகம், கை, கால்களை துணி அல்லது உறைகள்  கொண்டு மூடியிருப்பது நல்லது. 

முதலுதவி: 

வெயிலால் மயக்கம் ஏற்பட்ட நபரை குளிர்ந்த இடத்தில் கிடத்தவும். ஈரத்துணியால் துடைத்து பின்னர் வெதுவெதுப்பான நீரால் குளிக்கவைக்க வேண்டும். 

ஓஆர்எஸ், எலுமிச்சை நீர் என ஏதேனும் ஒன்றை குடிக்கக் கொடுக்கலாம். 

பின்னர் உடனடியாக அருகில் உள்ள சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். உடல் வெப்பநிலை குறிப்பிட்ட அளவு அதிகரித்தால் 'ஹீட் ஸ்ட்ரோக்' எனும் வெப்பத்தினால் பக்கவாதம் ஏற்படக்கூடும். 

♦ வீட்டின் செல்லப்பிராணிகளையும் வீட்டிற்கு வரும் பறவை, விலங்குகளுக்கும் தண்ணீர், உணவு வையுங்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com