பலருக்கும் விடியோக்களிலும் புகைப்படங்களிலும் பார்த்து நாமும் வளர்ப்புப் பிராணி வாங்கி வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் உதிக்கும்.
சிலர் வீடுகளில் ஏற்கனவே எப்படியோ வந்துவிட்ட வளர்ப்புப் பிராணி காணாமல் போன அல்லது இறந்துவிட்ட நிலையில் புதிய நாய் அல்லது பூனையை வாங்கி வளர்க்கலாம் என்ற எண்ணம் தோன்றும்.
இப்போதெல்லாம் தனிமைக்கான சிறந்த மருந்தாகவும் வளர்ப்புப் பிராணிகள் விளங்குகின்றன. எனவே, அதற்காகவும் சிலர் முயற்சிப்பர்.
ஒருவேளை வளர்ப்புப் பிராணி வாங்கி வளர்க்க வேண்டும் என்று விரும்பினால், நிச்சயம் சில அடிப்படை புரிதல்களை பெற வேண்டும்.
நாம் வாங்கி வளர்க்க வேண்டும் அல்லது விரும்பும் நாய் அல்லது புனையின் ரகம் எப்படி, அதன் குணம், அதன் வளர்ப்பு முறை போன்ற அனைத்தையும் முதலில் அறிந்துகொள்ள வேண்டும்.
அதோடு நீங்கள் வளர்க்க விரும்பும் ரக நாய் அல்லது பூனைக்கு, நீங்கள் வசிக்கும் பகுதியின் சுற்றுச்சூழல் ஏற்றதாக இருக்குமா என்பதையும் ஆலோசிக்க வேண்டும்.
உங்கள் வாழ்மறைக்கு ஏற்றதாக இருக்குமா என்பதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அது உங்களுக்கோ அல்லது நீங்கள் அதற்கோ சுமையாக நேரிடலாம்.
ஒரு நாய்/பூனையை வளர்ப்பது ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயமல்ல என்று நினைக்க வேண்டாம். அதற்காக மாதந்தோறும் ஒரு பட்ஜெட்டை ஒதுக்க வேண்டும். அதற்கான உணவு, மருத்துவச் செலவு, சுத்தப்படுத்துவதற்கான சோப்பு போன்றவற்றின் விலைகளை கேட்டு அறிந்து கொள்ளலாம்.
நாய் அல்லது பூனையை வளர்க்க வேண்டும் என்றால், அதற்காக வீட்டில் தனியாக ஓரிடம் நிச்சயம் இருக்கவே வேண்டும். எங்கு வேண்டுமென்றாலும் இருந்து கொள்ளும் என்ற நிலை இருக்கக் கூடாது.
அங்குதான் அதற்கான உணவு வைக்க வேண்டும். அந்த இடத்தை தினமும் சுத்தப்படுத்த வேண்டும் என்பதையும் நினைவில் கொள்க.
உள்ளே நாய் / பூனை இருக்க மற்றும் வெளியே அழைத்துச் செல்ல வசதி இருக்கிறதா என்று ஆலோசிக்கவும்.
சும்மா வாங்கி வீட்டில் விட்டுவிட்டு சோறு போட்டால் போதும் என்று மட்டும் நினைக்கக் கூடாது. அதற்கு நேரம் ஒதுக்க வேண்டும். அதனை ஒரு குழந்தையைப் போல பராமரிக்க வேண்டும். குளிக்க வைக்க, காதுகளை பரிசோதிக்க நேரம் ஒதுக்க வேண்டும். அதன் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்தால்தான் வளர்ப்புப் பிராணியாக இருக்கும்.
ஒரு சீரான இடைவெளியில் மருத்துவரிடம் அழைத்துச் சென்று அதனை பரிசோதித்து, தேவையான ஊசிகளைப் போட வேண்டும்.
சிலர் நல்ல முறையில் நாய் / பூனைகளை பழக்குகிறார்கள். அதற்கு உங்களால் முடிந்தால், நிச்சயம் வளர்ப்புப் பிராணியை வாளர்க்கலாம்.