தலைவலி.. இது எப்போது வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். போகலாம். வந்தால் ஏன் வந்தது என்ற காரணத்தைக் கேட்கவும் முடியாது. போய்விடு என்று கட்டளையிடவும் முடியாது.
ஆனால், சிலர், இந்த தலைவலியைப் போக்க பல வழிகளைக் கையாள்கிறார்கள். சிலர் தலைவலியோடு வாழவே பழக்கிவிட்டிருக்கிறார்கள்.
எப்படியும் தலைவலி ஒரு கட்டத்தில் போய்விடும்தான். ஆனால், அதுவரை இருக்கும் வேலைகளை தலைவலியோடு செய்ய வேண்டும் என்றால் அதுதான் தலைவலிக்கெல்லாம் தலைவலி.
இப்படிப்பட்ட தலைவலியை மாத்திரை மருந்து இல்லாமல் போக்க சில வழிமுறைகள் இருக்கிறதாம். உடல்நல நிபுணர்கள் அதனை சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
சிலர்.. சூடாக தேநீர் அருந்தினால் தலைவலி போய்விடும் என்கிறார்கள். அவர்களின் மனதுக்கு ஏற்ப சில நேரங்களில் ஓடியே போய்விடத்தான் செய்கிறது.
சிலர், தலைவலியோடு தூங்கச் சென்றுவிடுகிறார்கள்.
தலைவலி என்றால் அதற்கு கைவந்த கலை, தைலம்தான். ஏதோ ஒரு தைலத்தைத் தலையில் தேய்த்துக்கொண்டு ஓய்வெடுத்தால் ஒரு வழியாக தலைவலி போய்விடும் என்கிறார்கள்.
தலையை நன்கு அழுத்திப் பிடித்து மசாஜ் செய்தால் சில வகை தலைவலிகள் ஓடிவிடும். சிலருக்கு மிக அழுத்தமாக கயிற்றால் தலையைக் கட்டிக்கொண்டால் தலைவலி பறந்துவிடும்.
திடீரென பயங்கரமாக தலை வலித்தால் கழுத்துப் பகுதியில் ஒத்தடம் அல்லது கைகளால் பிடித்துவிட்டாலும், தலைக்கு ரத்த ஓட்டம் சீராகி தலைவலி சரியாகிறதாம்.
சிலருக்கு உடலில் போதிய தண்ணீர்ச்சத்து இல்லாமலும் தலைவலிக்கலாம். அப்படியிருந்தால் நன்கு தண்ணீர் அல்லது பழச்சாறு அருந்தினாலும் தலைவலி சரியாகலாமாம்.
சாப்பிடாவிட்டாலும் சிலருக்கு பசியில் தலைவலி வந்துவிடும். அவர்களுக்கு உணவே மருந்து.
ஏதேனும் பிரச்னை அல்லது குழப்பத்தின்போது தலைவலி ஏற்பட்டால், இருக்கும் இடத்திலிருந்து வெளியேறி சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம். பாடல் கேட்பது போன்றவை மனதை எளிதாக்கும். அப்போது தலைவலிக்கு நிவாரணம் தேடலாம்.