
ஆப்பிள் நிறுவனத்தை தொடர்ந்து கூகுளும் தனது ஸ்மார்ட் போனுக்கான உற்பத்தியை இந்தியாவில் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் உற்பத்தி செய்து அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட கண்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.
உறுதி செய்யப்படாத தகவல்களில்படி பாக்ஸ்கான் மற்றும் டிக்ஸான் டெக்னாலஜீஸ் நிறுவனங்களுடன் இணைந்து கூகுள் ஏற்கெனவே சோதனை உற்பத்தியை மேற்கொண்டதாகவும் விரைவில் உற்பத்தி தொடங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆப்பிள் போன்கள் உற்பத்தி செய்யும் அதே நிறுவனங்களுடன் கூகுளும் கை கோக்கவுள்ளது. இது தொடர்பாக கூகுள் எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.
பிக்சல் 9 சிரீஸ் போன்கள் வெளியிடும் முயற்சியில் உள்ள கூகுளின் அடிப்படை மாடல் போன்களை டிக்ஸானும் ப்ரோ மாடல் போன்களை பாக்ஸ்கானும் தயாரிக்கவுள்ளன.
செப்டம்பரில் தயாரிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் உள்நாட்டு தயாரிப்புக்கான மானிய திட்டத்தின் பயன்பாடு காரணமாக இந்தியாவில் உலக தொழில்நுட்ப ஜாம்பவான்கள் தயாரிப்பு மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆப்பிள் தனது தொடக்க இரண்டு மாதங்களில் ரூ.16,500 கோடி மதிப்பிலான ஐபோன்களை இங்கிருந்து தயாரித்து ஏற்றுமதி செய்தது. உலகம் முழுவதும் உள்ள ஏழில் ஒரு ஐபோன் இந்தியாவில் உற்பத்தியானது என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
2014-15 ஆண்டின் ரூ.18,900 கோடி மதிப்பை காட்டிலும் 2024 நிதியாண்டில் ரூ.4.10 லட்சம் கோடியாக உள்நாட்டு மொபைல் தயாரிப்பு உயர்ந்துள்ளதாகவும் இந்த விகிதம் என்பது 2 ஆயிரம் சதவிகிதம் எனவும் இந்திய செல்லுலார் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.