தீவிர உணவுக்கட்டுப்பாடுகளால், ஒருவரது உடலில் சில தற்காலிக பாதிப்புகள் ஏற்படும் என்பதை இதுவரை எத்தனையோ ஆய்வுகள் சொல்லி வந்தாலும், அண்மையில் அமெரிக்க இதயத் துறைசார்ந்த கழகத்தில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரையில், நீண்டகால பாதிப்புகளும் பட்டியலிடப்பட்டுள்ளன.
மிகத் தீவிரமான உணவுக் கட்டுப்பாட்டு முறைகளைப் பின்பற்றுபவர்களுக்கு ஏற்படும் நீண்டகால உடல்நலப் பிரச்னைகள் பற்றி இந்த ஆய்வில் இதுவரை வெளிவராதத் தகவல்களும் வெளியாகியுள்ளன.
அதாவது, உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஒருவர் மேற்கொள்ளும் தீவிர உணவுக்கட்டுப்பாடு, இதய நோய்களுக்குக் காரணமாகி, மரணத்துக்கு இட்டுச்செல்லும் என்று எச்சரித்துள்ளது.
இது குறித்து மருத்துவர்கள் கூறுவது என்னவென்றால், இது ஆய்வின் ஆரம்பக்கட்டத்தில் உள்ளது. இதனை உறுதி செய்ய மேலும் அதிக ஆய்வு முடிவுகள் தேவைப்படலாம் என்றாலும், தீவிர உணவுக்கட்டுப்பாடு சில அபாயங்களைக் கொண்டிருக்கலாம் என்றே கருதப்படுகிறது.
உடல்நிலைப் பாதிப்புக்காக மருத்துவர் அல்லது உணவு நிபுணர் ஒருவர் உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தாத நிலையில், ஒரே மாதிரியான உணவு முறையை ஒருவர் நீண்டகாலத்துக்கு எடுத்துக்கொள்ளும்பட்சத்தில் அது நிச்சயம் உடல்நிலையை பாதிக்கும். கரோனா வைரஸைப் பொருத்தவரை எத்தனையோ வதந்திங்கள் பரவின. ஆனால், அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதையே நம்பினோம். அதுபோல, இந்த தீவிர உணவுக்கட்டுப்பாட்டு விவகாரத்திலும் ஆய்வு முடிவுகளின் விவரங்களைத்தான் நம்ப முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
இது குறித்து உணவுமுறை குறித்த நிபுணர்கள் கூறுகையில், நீண்டகால தீவிர உணவுக்கட்டுப்பாடு புரதம், விட்டமின்கள், மினரல் உள்ளிட்ட ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கு வழிவகுக்கலாம். சில முக்கிய பிரபலங்கள் கூட, தீவிர உணவுக்கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், திடீரென இயற்கை மரணத்தைத் தழுவியிருப்பார்கள். அவர்கள் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு, உடல்நிலையைக் கவனிக்காமல் விட்டிருப்பார்கள். இதுதான் நிலைமையை மோசமாக்குகிறது என்கிறார்கள்.