

- டாக்டர் ரஜத் கேசரி
(கல்லீரல் மற்றும் இரைப்பை குடல் நிபுணர்)
உணவுப் பழக்கவழக்கத்தாலும் உடல் இயக்கம் இல்லாத காரணத்தாலும் இன்று பலருக்கும் செரிமானக் கோளாறுகள் இருக்கின்றன. சமீபமாக அஜீரணம் உள்ளிட்ட வயிற்றுப் பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன.
சிலருக்கு எளிதான செரிமானம் ஆகக்கூடிய அல்லது மிகவும் குறைவாக சாப்பிட்டால்கூட வயிறு நிரம்பிவிடுவதுபோல இருக்கும். சிலருக்கு சாப்பிட்டவுடன் வயிற்றெரிச்சல் ஏற்படும். அது நாள்முழுவதும் குறிப்பாக இரவு உணவுக்குப் பின் அசௌகரியமாக இருக்கும். தூக்கம் வரவில்லை என்று கூறுவார்கள்.
இந்தப் பிரச்னைகள் எல்லாம் மிகவும் சாதாரணமானதாகத் தோன்றலாம், ஆனால் இவை ஒருவரின் வேலை, தூக்கம், வாழ்க்கைத் தரத்தை கடுமையாக பாதிக்க வாய்ப்புள்ளது.
வயிற்றின் மேல் பகுதியில் லேசான வலி அல்லது எரிச்சல் போன்ற உணர்வுதான் டிஸ்பெப்சியா அல்லது அஜீரணம் எனும் செரிமானக் கோளாறு. வயிற்றில் எரிச்சல் அல்லது வலி இருக்கும், சாப்பிடும்போது சீக்கிரம் வயிறு நிரம்பிய உணர்வு, சாப்பிட்ட பிறகு வயிறு கனமாக இருப்பது போன்ற உணர்வு, வயிறு வீக்கம், அதிகப்படியான வாயு, குமட்டல், நெஞ்செரிச்சல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.
சிலருக்கு இந்த அறிகுறிகள் பல மாதங்களாக நீடிக்கும். இதனால் ஏதோ பெரிய பிரச்னை வந்துவிட்டது என்று பயப்படத் தொடங்குகிறார்கள். பரிசோதனைகளில் சிலருக்கு என்ன பிரச்னை என்று தெரிவதில்லை. அதாவது பிரச்னைகளை சரியாக காட்டுவதில்லை. இதை நாங்கள் செயல்பாட்டு டிஸ்பெப்சியா என்று அழைக்கிறோம்.
இது பெரும்பாலும் ஒழுங்கற்ற உணவு நேரங்கள்(நேரம் தவறி சாப்பிடுவது), நள்ளிரவில் சாப்பிடுவது, மன அழுத்தம், தூக்கமின்மை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களுடன் தொடர்புடையது. நவீன வாழ்க்கை முறை இதற்கு ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது. அஜீரணம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று சொல்ல முடியாது.
சில நேரங்களில் வயிற்றில் அதிகப்படியான அமிலத்தன்மை, ஹெலிகோபாக்டர் பைலோரி(வயிற்றில் பாக்டீரியா தொற்று, வயிறு அல்லது சிறுகுடலில் புண்கள், பித்தப்பை நோய், அரிதான சந்தர்ப்பங்களில் வயிற்றுப் புற்றுநோயாகக்கூட இருக்கலாம்.
திடீரென உடல் எடை குறைவது, மீண்டும் மீண்டும் வாந்தி, விழுங்குவதில் சிரமம், கறுப்பு நிறத்தில் மலம், ரத்த சோகை, நடுத்தர அல்லது வயதான காலத்தில் முதல்முறையாக தோன்றும் அஜீரணம் ஆகியவற்றை ஒருபோதும் புறக்கணிக்கக் கூடாது. இந்த அறிகுறிகளுக்கு முறையான மருத்துவப் பரிசோதனை தேவை. காரணத்தை முன்கூட்டியே கண்டறிய எண்டோஸ்கோபி சிகிச்சை அவசியம்.
இப்போதைய நவீன வாழ்க்கை முறைதான் செரிமானத்திற்கு எதிரியாக இருக்கிறது. காலை உணவைத் தவிர்ப்பது, அவசரமாக சாப்பிடுவது, இரவில் அதிகமாக சாப்பிடுவது, அடிக்கடி காரம் அல்லது எண்ணெய் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது, அதிகப்படியான தேநீர் அல்லது காபி, மது, புகைப்பிடித்தல், தொடர்ச்சியான மன அழுத்தம் ஆகியவை வயிற்றை எரிச்சலூட்டுகின்றன. இதனாலே அஜீரணக் கோளாறு ஏற்படுகிறது.
என்ன செய்ய வேண்டும்?
சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும்.
இரவு உணவு எளிதில் ஜீரணம் ஆகக்கூடியதாக இருக்க வேண்டும்,
இரவு உணவை தாமதமாக சாப்பிடக்கூடாது.
எண்ணெய், காரம் நிறைந்த உணவுகளைக் குறைக்க வேண்டும்.
ஃபாஸ்ட் ஃபுட்(துரித உணவுகள்), ஜங்க் ஃபுட்(பொருந்தா உணவுகள்) தவிர்க்க வேண்டும்.
மன அழுத்தத்தை நிர்வகிப்பது, போதுமான தூக்கம் பெறுவது போன்ற மாற்றங்கள் அவசியம்.
அஜீரணம் தொடர்ந்து இருப்பது அல்லது அஜீரணத்திற்கு மருத்துவரின் அறிவுறுத்தலின்றி மருந்தகங்களில் மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடுவது ஆகியவை சரியானது அல்ல. முதல்முறையாக அஜீரணம் ஏற்பட்டால் கண்டிப்பாக ஒருமுறை மருத்துவரை அணுகுவது நல்லது. சரியான நேரத்தில் நோயைக் கண்டறிதல் அதிலிருந்து முற்றிலும் விடுபட உதவும், நீண்ட காலத்திற்கு செரிமான ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.