

பிப். 14 ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்தன்று காதலர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்தவும் பரிமாறிக்கொள்ளவும் ஒருவருக்கொருவர் பிடித்த பொருள்களை பரிசளிப்பதுமாக அந்த நாளைக் கொண்டாடுகின்றனர்.
காதலை பரிமாறிக்கொள்வதும் பரிசளித்துக்கொள்வதும் காதலருடன் நேரம் செலவிடுவதும் அந்த உறவை பலப்படுத்தும், இருவருக்கும் இடையே இருக்கும் பல்வேறு பிரச்னைகளைத் தீர்க்கும் என்றே பல ஆய்வுகளும் கூறுகின்றன.
அவ்வாறு அன்பை பரிமாறிக்கொள்வது உடலில் ஆக்சிடோசின் அளவை அதிகரித்து மன அழுத்தத்தைக் குறைக்கும் என்றும் ஒட்டுமொத்தமாக உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
ஆனால் காதலர் தினத்தன்று மட்டுமே அன்பை பரிமாறிக்கொள்ள வேண்டும் என்று அவசியமல்ல. இன்று பெரும்பாலாக அனைத்து நாள்களும் கொண்டாடப்பட வேண்டும் என்றே பெரும்பாலாக அனைவரும் நினைக்கின்றனர்.
அந்த வகையில், காதலர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று இணையரில் ஒருவர் நினைக்கிறார், மற்றொருவர் அதனை சாதாரணமாகக் கடந்து செல்கிறார். இந்த காதலர் தினத்தால்கூட உறவில் பிரச்னை ஏற்படுவதாக உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். காதலர் தினத்தை கண்டிப்பாக கொண்டாட வேண்டும் என்ற ஒரு அழுத்தத்துடன் கையாண்டால் அது பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
காதலர் தினத்தன்றுதான் காதலை வெளிப்படுத்த வேண்டும் என்று இல்லை, அவ்வப்போது இணையருக்குள் அன்பை பரிமாறிக்கொள்ள வேண்டும், இருவரும் தங்களுக்கான நேரத்தை ஒதுக்கி மனம்விட்டு பேச வேண்டும். நேரம் கிடைக்கும்போது வெளியில் பயணங்கள் மேற்கொள்ளலாம். பிரச்னைகளை உடனுக்குடன் பேசி தீர்த்துக்கொள்வதும் உறவைப் பலப்படுத்தும்.
எந்தவொரு விஷயத்தையும் வெளிப்படைத்தன்மையுடன் கையாண்டால் உரையாடலாகவோ அல்லது புரிதலாகவோ மாறும். காதலர் தினத்தைக் கொண்டாட வேண்டுமா? கொண்டாடினால் என்ன மாதிரி செய்யலாம்? என இருவரும் சேர்ந்து பேசி முடிவெடுப்பது நல்லது. ஒருவர் ஏமாற்றம் அடைந்து ஒருவர் கண்டுகொள்ளாமல் இருக்கும்போது அங்கு தவறான புரிதல் ஏற்படுகிறது. ஒருவரின் விருப்பத்தை மற்றொருவர் மதித்து முடிவெடுத்தால் அங்கு பிரச்னை எதுவும் எழாது. உறவை நீட்டிக்க விட்டுக்கொடுத்தலும் அவசியம். இருவரும் பேசி ஒருவரையொருவர் புரிந்துகொள்வது தெளிவானதொரு முடிவுக்கு கொண்டு செல்லும்.
ஒருவரையொருவர் புரிந்துகொள்வதைவிட எந்த நாளும் எந்த பரிசுகளும் பெரிதல்ல. உங்களுக்கு பிடித்த சிறிய சிறிய விஷயங்களை அவ்வப்போது செய்வது அந்த நாளை அழகாக்கும்.
மாறாக, பலரும் அதனை ஒரு அழுத்தத்தில் கண்டிப்பாக பரிசளிக்க வேண்டும் என்று பொருளாதார பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். இது தேவையற்றது, விலையுயர்ந்த பரிசுகளைவிட அன்பான வார்த்தைகள் விலைமதிப்பில்லாதவை. இன்று ஒருநாள், எல்லா நாள்களுக்கும் போதுமானதுஅல்ல. இந்த ஒருநாள் எல்லாவற்றையும் சரிசெய்யாது.
காதலர் தினத்தன்று மட்டுமில்லாமல், அவ்வப்போது உங்கள் துணையிடம் அன்பை வெளிப்படுத்துங்கள், எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்துங்கள், முடிந்ததைச் செய்யுங்கள், ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். சில சூழ்நிலைகளில் உங்கள் துணை எப்படியோ அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். நம்மை காதலிக்கும் ஒரு உறவு நம்முடன் இருப்பது வரமே.
மாறாக, காதலர் தினத்தை கொண்டாடுவதை, காதலை வெளிப்படுத்துவதை ஒரு அழுத்தமாக எடுத்துக்கொள்ள வேண்டாம், காதல் அனுபவிக்க வேண்டியது, அதனை கட்டாயப்படுத்தவோ கையாள்வதோ வேண்டாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.