கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மரங்களின் தாய் திம்மக்காவுக்கு வயது 105!

பிபிசி  கணக்கெடுப்பு நடத்தித் தயாரித்த,  சென்ற ஆண்டிற்கான (2016) செல்வாக்கு மிக்கப்  பெண்கள்  பட்டியலில்  கர்நாடகா மாநிலத்தைச்  சேர்ந்த திம்மக்கா என்ற 105 வயது மூதாட்டி  இடம்பிடித்து  இந்திய  

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:01 am

அங்கவை

பிபிசி  கணக்கெடுப்பு நடத்தித் தயாரித்த,  சென்ற ஆண்டிற்கான (2016) செல்வாக்கு மிக்கப்  பெண்கள்  பட்டியலில்  கர்நாடகா மாநிலத்தைச்  சேர்ந்த திம்மக்கா என்ற 105 வயது மூதாட்டி  இடம்பிடித்து  இந்திய  நாட்டிற்குப் பெருமை சேர்த்திருக்கிறார். திம்மக்கா அப்படி என்ன செய்து  இந்தப் பட்டியலில் இடம் பிடித்தார்? 

திம்மக்காவே சொல்கிறார்:

"எனது சொந்த கிராமம் பெங்களூரிலிருந்து முப்பத்தைந்து கி. மீ. தூரத்தில் உள்ள ஹுலிகல். எனக்கு  பதினாறாவது வயதில்  சிக்கய்யா  என்பவருடன் திருமணம் நடந்தது.  திருமணம் நடந்து  பத்து  ஆண்டுகள்  ஆன பிறகும்   குழந்தை பாக்கியம் இல்லை.  போகாத  கோயில், குளங்கள் இல்லை. எடுக்காத விரதங்கள் இல்லை. செய்யாத  நேர்த்திக்கடன்கள்  இல்லை.  ஆனால் குழந்தை பாக்கியம் மட்டும் நழுவிப் போய்விட்டது.  ஊரில் உள்ளவர்கள்   நேரடியாகவும் மறைமுகமாகவும் மலடி  என்று  பேசினார்கள்.  இந்தக் குத்துப் பேச்சுக்கள் மனதை நோகடிக்க... நொந்து போன நான்  தற்கொலை  செய்து கொள்ள குளத்தில் குதித்தேன். ஆனால்  உயிர் போகவில்லை. இதென்ன கொடுமை என்று  வீட்டில் முடங்கினேன். கணவர்தான் என்னைத் தேற்றினார்.

பெயர் சொல்ல  வாரிசு இல்லையென்று துக்கப் படுவதைவிட பெயர் சொல்லும்படியான  சமூகப்  பணிகளை செய்வோம் என்று முடிவெடுத்தோம். இந்தக் கிராமத்தை  இணைக்கும்  சாலை  வெறும்  பொட்டல் காடாக  கிடந்தது. சாலைப் பயணிகளுக்கு நிழல் தரும் மரங்கள் இருந்தால் நல்லது ... சாலையில் சுட்டெரிக்கும் வெயிலின் உக்கிரத்தையும் குறைக்கலாம். தவிர பொட்டல்காடை ஒரு  சோலைவனமாக்கிப் பார்க்க மனசு துடித்தது. அதனால் சாலையின் இருபுறங்களிலும் கணவரின் உதவியுடன்   மரங்களை  நட ஆரம்பித்தேன்.

தொடக்கம்   ஆலங்கன்றுடன் 1948-இல்  ஆரம்பமானது.  அது நன்றாக வளர ஆரம்பித்ததும் உள்ளுக்குள்  பேரானந்தம் பரவியது. ஆலங்கன்றுகளைத்   தேடி வாங்கி வந்து நட ஆரம்பித்தோம்.  மரக்கன்றுகளை  நட்டால் போதுமா,  தண்ணீர் ஊற்ற வேண்டாமா...?  வியர்வை சிந்த தினமும் குடத்தில் தண்ணீரைச் சுமந்து மரக்கன்றுகளை  நீர் ஊற்றி வளர்த்தேன்.  இருபத்தைந்தாண்டுகளுக்கு  முன் கணவர் இறந்து   விட்டாலும்,  நான் மரக்கன்றுகள்  நடுவதை விடவில்லை... 

எங்களுக்குக்  குழந்தைகள் இல்லாததால், நட்ட  மரக்   கன்றுகளையே குழந்தைகளைப்  போன்று பாவித்து வளர்த்தோம். சுமார் நான்கு கி. மீ. தூரம் சாலையின் இருபுறமும் மரங்களை வளர்த்தோம். ஊருக்குள் நுழையுமுன்  வழி நெடுக   பச்சைப்    பந்தல்  போடப் பட்டிருப்பது   போன்று  பரந்து  விரிந்து நிற்கும் இந்த பச்சை மரங்களின்  கிளைகள்   காற்றில்   ஆடி   வாங்க  வாங்க.. என்று வருபவர்களை வரவேற்கும்.  எண்பது ஆண்டுகளில் சுமார் எட்டாயிரம் மரங்களை  நாங்கள்  நட்டு வளர்த்து விருட்சமாக்கியிருக்கிறோம். 

இந்த பசுமைப் பணியைப் பாராட்டி  மத்திய அரசின் பல்வேறு விருதுகள் எனக்கு வழங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக இப்போது  பிபிசி  தயாரித்திருக்கும் பட்டியலில்  எனக்கு இடம் அளித்து கெளரவித்திருக்கிறார்கள்'' என்றார்.

சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதிலும்  பசுமையைப் பரப்புவதிலும் பேணுவதிலும் கவனத்தை குவித்து  வாழ்ந்திருக்கும்  திம்மக்கா,  நட்ட மரங்களில்  சுமார் நானூறு   ஆல மரங்கள் அடங்கும். திம்மக்காவிற்கு நூற்றிஐந்து   வயதானாலும் இன்றைக்கும்   எங்கு புதிதாக  மரக்   கன்றுகள் நடலாம்  என்ற சிந்தனையில் இடம் தேடி அலைகிறார்.  இயற்கை ஆர்வலர்களுக்கு  முதுமையிலும் திம்மக்காவின் ஓயாத  செயல்பாடு  ஒரு  விந்தையாக  அமைந்துவிட்டது. இத்தனைக்கும், திம்மக்கா பள்ளி படிப்பைக்கூட முடிக்காதவர்.   இருந்தாலும் பசுமை குறித்த  விழிப்புணர்வினைப்   பரப்ப ...   காக்க  அவர் வாழ்கிறார்.

திம்மக்காவை  கிராம மக்கள் இப்போது மரங்களின் தாய்  என்றழைக்கிறார்கள். உடல்நலக் குறைவு காரணமாக  தனது வளர்ப்பு மகன்  உமேஷுடன்   பெங்களூருவில்  சிறிய வாடகை வீட்டில்   திம்மக்கா வசிக்கிறார். திம்மக்காவின் பெயரில்  உமேஷ் தொண்டு நிறுவனம்  ஒன்றை  நடத்திவருகிறார். 

Story image

"ஆங்கில நாளிதழ் ஒன்றில் என்னைப் பற்றிக் கட்டுரை வெளிவர .. அது  நீதிபதி  டி.என். பகவதியின் கவனத்திற்குச் செல்ல, அவர் அப்போது  தேசிய  குடிமகன் விருது  வழங்கும்  குழுவின்  தலைவராக இருந்தார்.  

அவர்  என்னை விருதுக்காக சிபாரிசு செய்து 1996  டிசம்பர்  23- இல்  விருதினை  எனக்கு  வழங்கினர்.  விருது வாங்க  கிராமத்திலிருந்து  டில்லி சென்றிருந்தேன். துணைக்கு  கிராமத்திலிருந்து ஒருவரை அழைத்துப் போயிருந்தேன்.  விருது விழாவில்  விருது, பட்டயம், சான்றிதழ்,  பணமுடிப்பு    கொடுத்தார்கள். வீடு திரும்பிய போது,  கூட வந்தவர்  பணத்தை மறைத்து விட்டு  மற்றவற்றைக் கொடுத்துச் சென்றார்.  இந்தக் கொடுமையை  எங்கே போய்ச் சொல்வது'' என்று சிரிக்கிறார் திம்மக்கா.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.