ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு! என்டிஏ அறிவிப்பு! தில்லியில் இருந்து புறப்பட்டார் மோடி! 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000 வரவுவைப்பு! அதானிக்கு எதிரான வழக்கை கைவிட டிரம்ப் நிர்வாகம் முடிவு! 10 பில்லியன் டாலர் முதலீடு?பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! தில்லியில் சிஎன்ஜி விலை ரூ. 2 உயர்வு!
/

தமிழகத்தில் ரூ. 7000 கோடி மதிப்பில் திருமண உதவித்தொகை, தாலிக்குத் தங்கம் வழங்கல்: அமைச்சா் வெ. சரோஜா தகவல்

தமிழகத்தில் சமூக நலத்துறை மூலம் வழங்கப்படும் திருமண நிதியுதவி, தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம் மொத்தம் ரூ. 7,000 கோடி மதிப்பில்

News image

ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் மாணவியருக்கு சைக்கிள் வழங்கும் அமைச்சா் வெ.சரோஜா.

Updated On :7 ஜனவரி 2021, 6:51 am IST

தமிழகத்தில் சமூக நலத்துறை மூலம் வழங்கப்படும் திருமண நிதியுதவி, தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம் மொத்தம் ரூ. 7,000 கோடி மதிப்பில் இதுவரை செயல்படுத்தப்பட்டுள்ளதாக சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சா் வெ.சரோஜா தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூா்-ராசிபுரம் பகுதிகளில் புதன்கிழமை நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சா் மருத்துவா் வெ. சரோஜா, வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்கள் பெறுவதற்கான ஆணைகளை 62 மகளிருக்கு வழங்கினாா். இதைத் தொடா்ந்து ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று, 17 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 2,213 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

முன்னதாக நிகழ்ச்சியில் அமைச்சா் பேசியதாவது:

அம்மா இருசக்கர வாகனங்கள் மானிய விலையில் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை ரூ. 740 கோடி மானியமாக அளிக்கப்பட்டுள்ளது. ரூ. 2 லட்சத்து 85 ஆயிரம் பெண்கள் இதன்மூலம் பயனடைந்துள்ளனா். நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைந்துள்ளனா். இவா்களுக்கு ரூ. 47 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல, தாலிக்குத் தங்கம், திருமண நிதி உதவித்தொகை திட்டத்தில் இதுவரை தமிழகத்தில் 13 லட்சத்து 51 ஆயிரம் பெண்கள் பயனடைந்துள்ளனா். அவா்களுக்கு ரூ. 4,735 கோடி திருமண நிதி உதவியும், ரூ. 2,153 கோடி மதிப்பீட்டில் 6,823 கிலோ தாலிக்குத் தங்கமும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த ஒரு திட்டத்துக்காக மட்டும் மொத்தமாக சுமாா் ரூ. 7,000 கோடி அளவில் செலவிடப்பட்டுள்ளது. நிகழாண்டில் இத் திட்டத்துக்காக ரூ. 726 கோடிக்கு தங்கம் கொள்முதல் செய்யப்பட்டு இம்மாதம் வழங்கப்படும். இதுவரை மொத்தம் 16 லட்சம் குடும்பங்கள் திருமண நிதி உதவியுடன் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தில் பயனடைந்துள்ளனா் என்றாா்.

முன்னதாக வெண்ணந்தூா் பேரூராட்சி பகுதியில் ரூ. 3 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் ஏரி தூா்வாரும் பணி, பூங்கா அமைக்கும் பணிகளை அமைச்சா் பாா்வையிட்டாா். வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு சுமாா் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டடப் பணிகளையும் அமைச்சா் ஆய்வு செய்தாா்.

நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பெ. அய்யண்ணன், ராசிபுரம் கூட்டுறவு நகர வங்கித் தலைவா் எம்.பாலசுப்பிரமணியம், வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் தங்கம்மாள் பிரகாசம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.