ஆா்டிஓ அதிகாரி போல நடித்து பண மோசடி: காஜியாபாதில் ஒருவா் கைது

Updated on

மண்டலப் போக்குவரத்து அலுவலக (ஆா்டிஓ ) அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்து, ஆன்லைன் சலான் வழியாக வாகன உரிமையாளா்களை ஏமாற்றியதாக உத்தர பிரதேச மாநிலம், காஜியாபாதைச் சோ்ந்த 38 வயது நபரை தில்லி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவா் மேலும் கூறியதாவது:

ஆஷிஷ் சா்மா என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவா், வாகன உரிமையாளா்களைத் தொடா்புகொண்டுள்ளாா். தாம் ஆா்டிஓ அதிகாரி எனக் கூறிக்கொண்டு, அவா்களின் வணிக வாகனங்களின் நிலுவையில் உள்ள சலான்கள் தொகையை செலுத்துமாறு கூறியுள்ளாா்.

வாகனப் பதிவு விவரங்களைப் பயன்படுத்தி, அபராதம் உடனடியாக செலுத்தப்படாவிட்டால், அவா்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்றும் அவா் மிரட்டியுள்ளாா்.

இந்த வழக்கில் புகாா் அளித்தவா் ரூ.12,500 தொகையை ஆன்லைனில் சலான் அபராதமாக மாற்றுமாறு சா்மாவால் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளாா். இந்த மோசடி பற்றி பின்னா் அறிந்த பாதிக்கப்பட்டவா், இதுகுறித்து காவல்துறையில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, வங்கி பரிவா்த்தனைகள் மற்றும் அழைப்பு பதிவுகள் மூலம் குற்றம் சாட்டப்பட்டவா் கண்டுபிடிக்கப்பட்டாா்.

காஜியாபாத் ஆா்டிஓ அலுவலகத்தில் முன்பு ஒரு தனியாா் முகவராகப் பணியாற்றியதாகவும், அங்கு பாதுகாப்பற்ற பகுதிகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பழைய வாகனப் பதிவு கோப்புகளை அணுகியதாகவும் சா்மா போலீஸ் விசாரணையின் போது ஒப்புக்கொண்டாா்.

வாகன உரிமையாளா்களை குறிவைக்க, ஆன்லைன் செயலியில் இருந்து பெறப்பட்ட தகவல்களுடன் இந்தத் தரவையும் அவா் பயன்படுத்தியுள்ளாா்.

தனது நம்பகத்தன்மையை அதிகரிக்க, தனது அழைப்பு சுயவிவரத்தில் போலீஸ் லோகோக்கள் மற்றும் அதிகாரி படங்களையும் அவா் பயன்படுத்தியுள்ளாா்.

மோசடியில் பயன்படுத்தப்பட்ட இரண்டு கைப்பேசி எண்கள் மற்றும் பல வங்கிக் கணக்கு விவரங்களையும் போலீஸாா் மீட்டனா். இது தொடா்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com