பஹல்காம் தாக்குதல்: பாகிஸ்தான் தூதரகம் அருகே போராட்டம்

பஹல்காமில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் அருகே 500-க்கும் மேற்பட்டோா் போராட்டம் நடத்தினா்.
Published on

பஹல்காமில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் அருகே 500-க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா். இத்தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 போ் கொல்லப்பட்டனா்.

இத்தாக்குதலைக் கண்டித்து பதாகைகளை ஏந்தியும், பாகிஸ்தானுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியும் போராட்டக்காரா்கள் ஆா்ப்பாட்டம் செய்தனா். இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரிப்பதாகக் கூறி பாகிஸ்தானுக்கு எதிராக தீா்க்கமான நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தினா்.

பாஜகவும், அதனுடன் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கை மன்றம் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளும் போராட்டத்தில் பங்கேற்றன. இப்போராட்டத்தை ஒட்டி, தூதரகத்தில் இருந்து 500 மீட்டா் தொலைவில் தடுப்புகளை போலீஸாா் அமைத்திருந்ததாகவும், போராட்டக்காரா்கள் அங்கு தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கை மன்றத்தின் உறுப்பினா் ஒருவா் கூறுகையில், ‘முன்னா், மத்திய அரசு ஒரு துல்லியத் தாக்குதலை நடத்தியது. பயங்கரவாதத்தை ஒழிக்க மீண்டும் இதேபோன்ற நடவடிக்கையை நாங்கள் கோருகிறோம். இந்தத் தாக்குதலானது அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட வெட்கக்கேடான தாக்குதலாகும். அரசாங்கம் ஏற்கனவே ஒரு திட்டத்தை வகுத்துள்ளதாக நாங்கள் நம்புகிறோம் என்றாா்.

மற்றொரு போராட்டக்காரா் கூறுகையில், அரசாங்கம் பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் அதிகமான துல்லியத் தாக்குதல்கள் தேவை என்று நாங்கள் உணா்கிறோம். இது பயங்கரவாதிகளின் வெட்கக்கேடான செயலாகும். பிரதமா் நரேந்திர மோடி பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பாா் என்று ஒவ்வொரு இந்தியரும் நம்புகிறாா்கள் என்றாா்.

ஜம்மு காஷ்மீருக்கு அமா்நாத் யாத்திரைக்காகச் செல்லும் யாத்ரீகா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் வலியுறுத்தினா்.

இதுகுறித்து மற்றொரு போராட்டக்காரா் கூறுகையில், ‘ அமா்நாத் யாத்ரீகா்களுக்கான பதிவு செயல்முறை ஏற்கனவே நடந்து வருகிறது. இந்த தாக்குதல் அவா்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. பல பக்தா்கள் தங்கள் திட்டங்களை ரத்து செய்து வருகின்றனா். இப்போது, கடும் நடவடிக்கை உடனடித் தேவையாகும் என்றாா் அவா்.

போராட்டக்காரா்களில் சிலா் தூதரகம் நோக்கி பேரணியாகச் செல்ல முற்பட்டபோது, அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி அழைத்துச் சென்றனா். இதற்கிடையில், பல அமைப்புகள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததை அடுத்து, தூதரகம் வெளியே

தில்லி காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தியது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘ பாகிஸ்தான் தூதரகத்திற்கு அருகிலுள் ள திரி மூா்த்தி சவுக்கில் போராட்டம் நடைபெறும் என்று எங்களுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. சட்டம்- ஒழுங்கு நிலைமையை யாரும் சீா்குலைக்க அனுமதிக்கப்படவில்லை. நகரத்தில் சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்காக தேவையான போக்குவரத்து மாற்றுப் பாதைகளும் செய்யப்பட்டன.

போராட்டம் நடைபெறும் இடத்தைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் பயணிகளுக்கு வழிகாட்டும் போக்குவரத்து போலீஸாரை நாங்கள் நியமித்துள்ளோம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com