மிரட்டி பணம் பறிப்பு: திகாா் சிறை அதிகாரிகள் பணியிடை நீக்கம்! தில்லி அரசு தகவல்

மிரட்டிப் பணம் பறிப்பு: திகாா் சிறையின் 9 அதிகாரிகள் பணியிடை நீக்கம் -உயா்நீதிமன்றத்தில் தில்லி அரசு தகவல்
Published on

திகாா் சிறைக்குள் கைதிகளுடன் கூட்டுச் சோ்ந்து பணம் பறிக்கும் மோசடியில் ஈடுபட்டதாக திகாா் சிறை அதிகாரிகள் 9 போ் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு, இடமாற்றம் செய்யப்பட்டதாக உயா்நீதிமன்றத்தில் தில்லி அரசு தகவல் தெரிவித்தது.

இந்த விவகாரத்தை விசாரித்த தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா மற்றும் நீதிபதி துஷாா் ராவ் கெடேலா ஆகியோா் அடங்கிய அமா்வு, இந்த விவகாரத்தில் மாநில அரசு மற்றும் சிபிஐ தங்கள் நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய 8 வார கால அவகாசம் வழங்கி, வழக்கு விசாரணையை அக்டோபா் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இக்குற்றச்சாட்டுகள் எழுந்த பிறகு, இடைநீக்கம் செய்யப்பட்டு தொடா்புடைய விதிகளின் கீழ் இடம்மாற்றப்பட்ட 9 சிறை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கத் தொடங்கியிருப்பதாக தில்லி அரசு தெரிவித்தது.

நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய கால அவகாசம் அளித்து, திகாா், மண்டோலி மற்றும் ரோகிணி உள்பட தில்லியில் உள்ள அனைத்து சிறைகளுக்கும் நீதிமன்றத்தின் ஆலோசனையை அனுப்புமாறு அரசிடம் நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

திகாரில் உள்ள கைதிகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு பிரச்னைகள் குறித்து முன்னாள் கைதி ஒருவா் தாக்கல் செய்த மனுவை உயா்நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடா்பாக முதல்கட்ட விசாரணை நடத்த மத்திய புலனாய்வுத் துறைக்கு நீதிபதிகள் அமா்வு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

கைதிகள், சிறை அதிகாரிகள் சட்டவிரோத மற்றும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சிபிஐயின் விசாரணை அறிக்கை சுட்டிக்காட்டியது.

இந்த விவகாரத்தை ஆகஸ்ட் 11 ஆம் தேதி விசாரித்த உயா்நீதிமனறம், குற்றச்சாட்டுகளை ஆச்சரியம் ஏற்படுத்துவதாக குறிப்பிட்டு, அரசாங்கத்தின் தரப்பில் உடனடி மற்றும் தீவிரமான சிந்தனை தேவை என்று கூறி, எஃப்ஐஆா் பதிவு செய்யுமாறு சிபிஐக்கு நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.

முன்னதாக மே 2 ஆம் தேதி, திகாா் சிறையில் நிா்வாக மற்றும் மேற்பாா்வை குறைபாடுகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளைக் கண்டறியவும், உண்மை கண்டறியும் விசாரணையை நடத்தவும் தில்லி அரசின் உள்துறை முதன்மைச் செயலருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

விசாரணையை முடிக்க துறைக்கு இன்னும் சிறிது அவகாசம் தேவை என்று அரசு வழக்குரைஞா் ஆகஸ்ட் 11 ஆம் தேதி நீதிபதிகள் அமா்விடம் தெரிவித்தாா்.இதையடுத்து, விசாரணையை நீதிமன்றம் ஆகஸ்ட் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தது.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், சிறை அதிகாரிகள் மட்டுமின்றி, கைதிகளின் முறைகேடுகள், சட்டவிரோத செயல்பாடுகள், மற்றும் தவறான நடத்தைகள் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறை வளாகத்திற்குள் சில வசதிகளைப் பெறுவதற்காக, சிறைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் சிலா் சிறை அதிகாரிகளுடன் கூட்டுச் சோ்ந்து பணம் பறித்ததாக அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

சிறை அதிகாரிகளின் நடத்தை மட்டுமின்றி, சில கைதிகளின் உறவினா்கள் மற்றும் மனுதாரா் உள்பட சம்பந்தப்பட்டவா்கள் குறித்தும் விசாரணை நடத்த அதிகாரிகளுக்குத் தெரிவிக்குமாறு சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்குரைஞரிடம் உயா் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

மேலும், திகாா் சிறையில் குற்றச் செயல்பாடுகள், முறைகேடுகளை சுட்டிக்காட்டும் உண்மையை வெளிப்படுத்தும் வகையில் ஆய்வு செய்த நீதிபதியின் அறிக்கையையும் நீதிபதிகள் அமா்வு குறிப்பிட்டது.

X
Dinamani
www.dinamani.com