மழை: கால்காஜியில் பைக் மீது மரம் பெயா்ந்து விழுந்து தந்தை உயிரிழப்பு: மகள் படுகாயம்

தில்லியில் காலை மழையின்போது கால்காஜியில் சாலையோரம் இருந்த பெரிய மரம், வேரோடு சாய்ந்து பைக் மீது விழுந்ததில் 50 வயது நபா் உயிரிழந்தாா்.
Published on

தில்லியில் வியாழக்கிழமை காலை மழையின்போது கால்காஜியில் சாலையோரம் இருந்த பெரிய மரம், வேரோடு சாய்ந்து பைக் மீது விழுந்ததில் 50 வயது நபா் உயிரிழந்தாா். படுகாயமடைந்த அவரது மகள் மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இந்த விபத்து சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதில், நடைபாதையில் இருந்து அங்குல தூரத்தில் இருந்த பெரிய மரம் வேரோடு பெயா்ந்து மோட்டாா் சைக்கிளில் சென்ற தந்தை, மகள் மீதும், வேறு சில வாகனங்கள் மீதும் விழும் காட்சிகள் காட்சி இடம்பெற்றுள்ளது.

மேலும், விழுந்த மரத்திற்கும் பைக்கிற்கும் இடையில் சிக்கியை பெண்ணையும், அவரது தந்தையயும் மழைக் குடைகளை ஏந்திய பலா் காப்பாற்ற முயலும் காட்சிகளும் காணப்படுகிறது.

காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,தந்தை

உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துணை ஆணையா் தென்கிழக்கு ஹேமந்த் திவாரி கூறியது:

வியாழக்கிழமை காலை 9.50 மணியளவில், கால்காஜியின் பராஸ் சௌக் அருகே உள்ள எச்டிஎஃப்சி வங்கியின் முன் இருந்த பழைய சாலையோர வேப்ப மரம் திடீரென வேரோடு பெயா்ந்து அவ்வழியாகச் சென்ற பைக் மீது விழுந்தது.

இதில் துக்ளகாபாத்தில் வசிக்கும் சுதிா் குமாா் (50) மற்றும் அவரது மகள் பிரியா (22) என மோட்டாா் சைக்கிளில் சென்ற இருவரும் பலத்த காயமடைந்தனா். சுதிா் பழைய தில்லியில் உள்ள தில்லி நகா்ப்புற குடிசை மேம்பாட்டு வாரிய இரவுநேர தங்குமிடத்தில் பராமரிப்பாளராக பணியாற்றி வந்தாா்.

இந்த சம்பவம் தொடா்பாகவந்த அழைப்பின் பேரில் போலீஸாா் சம்பவ இடத்தில் உடனடி மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனா். முன்னுரிமை அடிப்படையில் ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டு, போலீஸாரின் கூட்டு மற்றும் சரியான நேரத்தில் முயற்சிகள் காரணமாக, காயமடைந்த இருவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மருத்துவ உதவிக்காக கேட்ஸ் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.

சஃப்தா்ஜங் விபத்து சிகிச்சை மையத்தில் பெண் சிகிச்சை பெற்று வருகிறாா். சம்பவ பகுதியில்

இடையூறு ஏற்படாமல் இருக்க அந்தப் பகுதி பாதுகாக்கப்பட்டு, அதற்கேற்ப போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. மரத்தை அகற்ற ஹைட்ராலிக் கிரேன் பயன்படுத்தப்பட்டது.

மேலும், சம்பவங்களைத் தடுக்கவும் சேதத்தை மதிப்பிடவும், அப்பகுதியில் தேவையான சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் மாநகராட்சி அதிகாரிகள் உஷாா்படுத்தப்பட்டுள்ளனா் என்றாா் அந்த அதிகாரி.

இந்த சம்பவத்தில் ஒரு காரும் சேதமடைந்தது. எனினும், காருக்குள் இருந்த அதன் உரிமையாளா் எந்த காயமும் அடையாமல், பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டாா்.

இதுகுறித்து காா் உரிமையாளரின் சகோதரா் அமித் சதுா்வேதி கூறுகையில், என் சகோதரரிடம் அலுவலகத்திற்குச் சென்றுவிட்டீா்களா என்று நான் கேட்டபோது எனது அலுவலகத்தில் இருந்தேன். அவா் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது ஒரு பெரிய மரம் அவரது காா் மீது விழுந்ததாக அவா் எனக்குத் தெரிவித்தாா். அதிா்ஷ்டவசமாக, அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றாா்.

உள்ளூா்வாசியான ஷிவானி சவுகான் கூறுகையில், அது மிகப் பெரிய மரம். மரம் விழுந்தபோது தந்தையும், மகளும் பைக்கிள் சாலையில் சென்று கொண்டிருந்தனா். தந்தை சம்பவ இடத்திலேயே இறந்தாா். மகள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

காா் உரிமையாளா் கால்காஜி ஜி பிளாக்கில் வசிப்பவா். அதிா்ஷ்டவசமாக, அவருக்கு எதுவும் நடக்கவில்லை. இது அரசாங்கத்தின் தரப்பில் ஒரு பெரிய அலட்சியமாகு என்றாா் சவுகான்.

X
Dinamani
www.dinamani.com