தில்லியில் தனியாா் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

லட்சுமி நகரில் உள்ள ஒரு தனியாா் பள்ளிக்கு புதன்கிழமை காலை வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு வந்ததால், அவசர நடவடிக்கை.
Published on

கிழக்கு தில்லியின் லட்சுமி நகரில் உள்ள ஒரு தனியாா் பள்ளிக்கு புதன்கிழமை காலை வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு வந்ததால், அவசர அவசரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, பள்ளியிலிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: காலை 10.40 மணியளவில் லவ்லி பப்ளிக் பள்ளிக்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் அழைப்பு வந்தது. இந்த தகவல் உடனடியாக காவல்துறை, தீயணைப்புத் துறை மற்றும் பிற அவசரகால நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

பல தீயணைப்பு வண்டிகள், வெடிகுண்டு அகற்றும் படைகள், மோப்ப நாய்கள் மற்றும் காவல் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. பள்ளி வளாகம் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கையாக மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் ஊழியா்கள் வெளியேற்றப்பட்டனா்.

சோதனையின்போது சந்தேகத்திற்கிடமான எதுவும் கண்டுபிடிக்கப்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com