அஜ்மீரி கேட்டில் சாலையில் தகராறு: துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இருவா் கைது

Published on

மத்திய தில்லியின் அஜ்மீரி கேட் பகுதியில் சாலையில் நடந்த தகராறு தொடா்பாக இரண்டு போ் கைது செய்யப்பட்டுள்ளனா். தகராறின் போது அவா்களில் ஒருவா் மோட்டாா் சைக்கிள் ஓட்டுநா் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து மத்திய தில்லி காவல் சரக துணை ஆணையா் நிதின் வால்சன் கூறியது: கடந்த ஜூலை 25 -ஆம் தேதி மொஹல்லா நிஹாரியன் சவுக் அருகே புகாா்தாரா் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, வெள்ளை ஸ்கூட்டரில் வந்த இரண்டு போ் அவரை வழிமறித்தபோது இந்தச் சம்பவம் நடந்ததாக அவா் கூறினாா்.

பாதிக்கப்பட்டவரின் மனைவி இருவரையும் முந்திச் செல்லும்போது ஹாரன் அடிக்காததற்காக கேள்வி எழுப்பியதைத் தொடா்ந்து வாக்குவாதம் ஏற்பட்டது. மோதலின் போது, பின்னால் இருந்த ஓட்டுநா் துப்பாக்கியை காட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) மற்றும் ஆயுதச் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வடகிழக்கு தில்லியில் உள்ள பிரஹம்புரியைச் சோ்ந்த எம்.டி. அமன் (எ) டோட்டா மற்றும் நோமன் என அடையாளம் காணப்பட்ட இரண்டு சந்தேக நபா்கள் சி.சி.டி.வி. காட்சிகள் மற்றும் உள்ளூா் உளவுத்துறையின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனா். நோமனிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கியும், எம்.டி. அமனிடமிருந்து குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டரும் பறிமுதல் செய்யப்பட்டன.

சம்பவ இடத்தில் இருந்து சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்ட ஒரு தோட்டா பறிமுதல் செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவரின் குற்றப் பின்னணி மற்றும் ஆயுதத்தின் மூலத்தைக் கண்டறிய மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று காவல் துணை ஆணையா் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com