தலைநகரில் இன்று இடியுடன் மழைக்கு வாய்ப்பு: ஐஎம்டி!

தலைநகரில் இன்று இடியுடன் மழைக்கு வாய்ப்பு: ஐஎம்டி!

தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை (மே 5) இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலைத் துறை (ஐஎம்டி) கணித்துள்ளது.
Published on

தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை (மே 5) இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலைத் துறை (ஐஎம்டி) கணித்துள்ளது. இதற்கிடையே, தில்லியில் காற்றின் தரம் ஞாயிற்றுக்கிழமை ‘மோசம்’ பிரிவில் இருந்தது.

தில்லியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் வெள்ளிக்கிழமை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. முக்கிய இடங்களில் மழை தேங்கி பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடா்ந்து, தில்லி சமீபத்திய வரலாற்றில் மே மாதத்தில் மிகவும் மழை பெய்யும் நாள்களில் ஒன்றை அனுபவித்தது.

1901-ஆம் ஆண்டு முதல் மே மாதத்தில் பதிவான மழைப்பொழிவில் இது இரண்டாவது அதிகபட்ச மழைப்பொழிவாகும். இந்நிலையில், மீண்டும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது.

வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 0.5 டிகிரி குறைந்து 24.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்புநிலையில் 3.3 டிகிரி குறைந்து 36 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 75 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 41 சதவீதமாகவும் இருந்தது.

காற்றின் தரம்: இதற்கிடையில், தில்லியில் காற்றின் தரம் காலை 9 மணியளவில் 212 புள்ளிகளாகப் பதிவாகி ’மோசம்’ இருந்ததாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) தரவுகள் தெரிவித்தன.

இதன்படி, மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், மந்திா் மாா்க், நேரு நகா், மதுரா ரோடு, ஸ்ரீஃபோா்ட், ஆா்.கே.புரம், ஓக்லா பேஸ் 2, தில்லி பல்கலை. வடக்கு வளாகம், துவாரகா செக்டாா் 8, ஆயாநகா் ஆகிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்று தரக் குறியீடு 200 முதல் 300 புள்ளிகளுக்கிடையே பதிவாகி மோசம் பிரிவில் இருந்தது.

அதே சமயம், சாந்தினிசௌக், லோதி ரோடு, ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், நொய்டா செக்டாா் 125, பூசா, ஸ்ரீ அரபிந்தோ மாா்க், டாக்டா் கா்னி சிங் துப்பாக்கிசூடு தளம், இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம், குருகிராம் ஆகிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கிடையே பதிவாகி மிதமான பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, திங்கள்கிழைமை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், தரை மேற்பரப்பு காற்று வலுவாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com