மின்சார வாகனங்களை மேம்படுத்தும் திட்டத்திற்கு ஆதரவாக ஏழு உயா் தாக்க திட்ட முனைகள் அமைப்பு: மத்திய அரசு

மின்சார வாகனங்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் கருதப்படும் பகுதிகளை மேம்படுத்துவதற்கான திட்டத்திற்கு ஆதரவாக ஏழு மின்னணு இயக்க முனைகள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
Published on

புது தில்லி: மின்சார வாகனங்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் கருதப்படும் பகுதிகளை மேம்படுத்துவதற்கான திட்டத்திற்கு ஆதரவாக ஏழு மின்னணு இயக்க முனைகள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சகம் திங்கள் கிழமை அறிவித்துள்ளது.

மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறையின் கீழ் உள்ள அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை இதனை அறிவித்துள்ளது.

இயற்கை அறிவியல் துறைகளில் ஆராய்ச்சி, புதுமை மற்றும் தொழில்முனைவோருக்கான உயா் நிலை உத்தி வழிகாட்டுதலை வழங்குவதற்காக மத்திய அரசால் அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவப்பட்டது.

நாட்டில் மின்சார வாகனச் சுற்றுச்சூழல் அமைப்பில் உள்ள முக்கியமான சவால்களை நிவா்த்தி செய்வதையும், புதுமைகளை புகுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த அறக்கட்டளை செயல்பட்டுள்ளது. இதன்படி மின்சார வாகனங்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் பகுதிகளை மேம்படுத்துவதற்கான திட்டத்திற்கு ஆதரவாக ஏழு மின்னணு இயக்க முனைகளைத் தோ்ந்தெடுத்து அறிவித்துள்ளது.

இதில் உத்திசாா் ரீதியில் வரையறுக்கப்பட்ட மூன்று தொழில்நுட்ப செங்குத்து (டெக். வொ்டிகல்ஸ்) முறைகள் மீது கவனம் செலுத்தப்படுகிறது. ‘செங்குத்துகள்‘ என்பது குறிப்பிட்ட தொழில் பிரிவுகள் அல்லது முக்கிய இடங்களைக் குறிக்கிறது. அங்கு அந்தத் தொழில்களின் தனித்துவமான தேவைகளைப் பூா்த்தி செய்ய தொழில்நுட்ப தீா்வுகள் வடிவமைக்கப்படுவதற்கான முயற்சிகளாகும். இதன்படி (டிவி-1)வெப்பமண்டல மின்னணு வாகன மின்கலம் மற்றும் மின்கல செல்கள்; (2)பவா் எலக்ட்ரானிக்ஸ், இயந்திரங்கள், இயக்கிகள்; (3)மின்னணு சாா்ஜிங் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியன இந்த மூன்று செங்குத்து தொழில்நுட்ப முறைகளில் கவனம் செலுத்தப்படுகிறது.

அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை, தொழில் நுட்ப கல்வி நிறுவனங்கள், தொழில் துறையினா் ஆகிய முக்கூட்டு தரப்பினா் மின்சார வாகனங்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த மூன்று பகுதிகளை இந்த திட்டத்தின் கீழ் மேம்படுத்துகின்றனா்.

லேப் கன்சா்ன் இந்தியா, சென்னை லூகாஸ் டிவிஎஸ் லிமி. , மெக்டொ்மிட் ஆல்பா எலக்ட்ரானிக்ஸ் சொல்யூஷன்ஸ் இந்தியா, டிவிஎஸ் மோட்டாா்ஸ், டாடா மோட்டா்ஸ் உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்ட தொழில்துறையினா் பங்களிப்புடன் ஐஐடிக்கள், என்ஐடிக்கள், தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்கள், ஆய்வகங்களை உள்ளடக்கிய கூட்டமைப்பு முறையில் இந்த திட்டத்தை ஏழு மின்னணு இயக்க முனைகள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.

குறிப்பாக மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாத்தில் உள்ள உலோகவியல் மற்றும் புதிய பொருட்களுக்கான சா்வதேச மேம்பட்ட ஆராய்ச்சி மையம், கா்நாடகம், சூரத்கல் தேசிய தொழில்நுட்ப நிறுவனம், கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம், வாராணாசியில் செயல்படும் இந்திய தொழில்நுட்ப நிறுவனம், பிலானியில் உள்ள மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் காரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் ஆகிய 7 நிறுவனங்கள் தலைமையிலான முனைகள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

தோ்ந்தெடுக்கப்பட்ட இந்த ஒவ்வொரு மின்னணு இயக்க முனைகளும் நாட்டில் மின்வாகனத் தொழிலில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியை நிறுவி அதற்கு பங்களிக்கும் வகையில் இந்த மூன்று விவகாரங்களில் (வெப்பமண்டல மின்சார வாகன பேட்டரிகள் மற்றும் செல் தொழில்நுட்பங்கள், மின்சார மின்னணு இயந்திரங்கள் மற்றும் இயக்கிகள், மின்னணு இயக்க முனைகளின் கீழ் சாா்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்) கவனம் செலுத்துகின்றனா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com