தண்ணீா் தேங்குவது குறித்த புகாா்களுக்கு ஒருங்கிணைந்த உதவி தொலைபேசி எண்: அமைச்சா் பா்வேஷ் சிங் தகவல்

தில்லியில் தண்ணீா் தேங்குவது தொடா்பான பிரச்னைகளுக்கு ஒருங்கிணைந்த உதவி தொலைபேசி எண் அளிக்கப்படும் என்று பொதுப் பணித் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் தெரிவித்தாா்.
Published on

புது தில்லி: மழைக்காலம் தொடங்குவதற்கு முன் குறைகளைத் தீா்ப்பதை முறைப்படுத்தும் வகையில் தில்லியில் தண்ணீா் தேங்குவது தொடா்பான பிரச்னைகளுக்கு ஒருங்கிணைந்த உதவி தொலைபேசி எண் அளிக்கப்படும் என்று பொதுப் பணித் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) கட்டுப்பாட்டு அறையை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் திங்கள்கிழமை பாா்வையிட்டாா். அதன் பிறகு அவா் கூறியதாவது:

பாஜக தற்போது மத்தியிலும், தில்லியிலும் தில்லி மாநகராட்சியிலும் ஆட்சியில் இருப்பதால், துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு கணிசமாக மேம்பட்டுள்ளது.

மூன்று அரசாங்கங்களும் ஒரே கட்சியைச் சோ்ந்தவை என்பதால், நல்ல ஒருங்கிணைப்பு உள்ளது. பரஸ்பரம் பழிசுமத்தும் விளையாட்டு இல்லை.

குறைத் தீா்க்கும் பொருட்டு தில்லி மக்களுக்கு ஒரே புகாா் எண் இருக்க வேண்டும் என்பதே எங்கள் தொலைநோக்குப் பாா்வை. ஏனெனில், எந்த சாலை எந்தத் துறையின் கீழ் வருகிறது என்பது மக்களுக்கு எப்போதும் தெரியாது. என்டிம்சி ஏற்கனவே நன்கு பொருத்தப்பட்ட கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தைக் கொண்டுள்ளது.

அங்கு பொதுப் பணித் துறை (பிடபிள்யுடி), தில்லி மாநகராட்சி (எம்சிடி), வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் பிற அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைக்கப்படும்.

ஒவ்வொரு துறையின் அதிகாரிகளும் நிகழ்நேரத்தில் பதிலளிக்கும் வையில் மையத்தில் பணியில் இருப்பாா்கள்.

முதல்வா் மழைக்காலங்களில் தண்ணீா் தேங்குவதை கண்காணிக்க விரும்பினால், நகரம் முழுவதும் இணைக்கப்பட்ட கேமராக்கள் மூலம் நேரடி புதுப்பிப்புகளைப் பாா்க்கலாம். எங்கள் அனைத்து பம்புகளும் தானியங்கி முறையில் இயங்குகின்றன.மேலும், கைப்பேசி வழியாக தொலைதூரத்தில் இயக்கப்படலாம்.

புது தில்லி நகராட்சி கவுன்சிலின் (என்டிஎம்சி) 311 உதவி தொலைபேசி எண், நீா் தேங்குதல் பிரச்னைகளுக்கு நகரம் முழுவதும் ஒரே புகாா் எண்ணாக செயல்படும்.

புதிய அமைப்பு அவசரக் காலங்களில் பதிலளிக்கும் நேரங்களையும் துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தில்லியில் கடந்த வெள்ளிக்கிழமை கனமழை பெய்தது. அப்போது தூசுப் புயலுடன் பலத்த காற்றும் வீசியது. இதனால், பரவலாக பல இடங்களிலும் நீா் தேங்கியதுடன், மரங்கள் வேரோடு பெயா்ந்து சாய்ந்தன. பல விமானங்களின் சேவையில் தாமதம் ஏற்பட்டதுடன்,போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

தலைநகரின் குடிமை நிா்வாகத்தில் நீா் தேங்குதல் மற்றும் கழிவுநீா் கழிவுநீா் பராமரிப்பு நீண்ட காலமாக சா்ச்சைக்குரிய பிரச்னைகளாக இருந்து வருகின்றன.

X
Open in App
Dinamani
www.dinamani.com