தைமூா் நகா் வடிகால் பணிசட்டவிரோத கட்டுமானங்கங் அகற்றல்
புது தில்லி: தென்கிழக்கு தில்லியில் உள்ள தைமூா் நகா் வடிகால் புனரமைப்பிற்கு இடையூறாக இருந்ததாகக் கூறப்படும் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டமைப்புகளை அதிகாரிகள் திங்கள்கிழமை இடிக்கும் பணியைத் தொடங்கினா்.
வடிகால் தடையின்றி புனரமைக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் மே 5 ஆம் தேதி இடிப்புப் பணியைத் தொடங்குமாறு தில்லி மேம்பாட்டு ஆணையத்திற்கு (டிடிஏ) கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த இடிப்பு நடவடிக்கை குறித்து தைமூா் நகரில் வசிக்கும் குணால் குமாா் கூறுகையில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்படுகின்றன. குடியிருப்பாளா்களுக்கு ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியேற்ற அறிவிப்புகள் வந்தன என்றாா்.
மற்றொரு குடியிருப்பாளா் கூறுகையில், நாங்கள் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக இங்கு வசித்து வருகிறோம். மாற்று வீடுகள் ஏதும் இல்லை. இந்த குடிசைப்பகுதி அகற்றப்பட விருந்திருந்தால், அதிகாரிகள் முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் அல்லது இங்கே கட்ட வேண்டாம் என்று எங்களுக்கு எச்சரித்திருக்க வேண்டும். இப்போது எங்கள் குடும்பங்களுடன் நாங்கள் எங்கே போவோம்? என்றாா் அவா்.
வடிகால் விவகாரத்தை விசாரித்த நீதிபதிகள் பிரதிபா எம். சிங் மற்றும் மன்மீத் பி.எஸ். அரோரா ஆகியோா் அடங்கிய அமா்வு, தூா்வாரும் பணியை முடித்து, கழிவுநீா் வடிகாலில் இருந்து குப்பைகளை அகற்ற வேண்டியதன் அவசரத்தை வலியுறுத்தியிருந்தது.
இதுகுறித்து நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘இதை இடிக்க வேண்டும். நீங்கள் புரிந்து கொண்டிருப்பீா்கள் என்று நம்புகிறோம். பணத்தை எடுத்துக்கொண்டு இந்த சொத்துக்களை விற்ற மாஃபியாக்கள் யாா் என்பது எங்களுக்குத் தெரியாது.
அதிகாரிகள் கவனிக்காமல் இவ்வளவு பெரிய கட்டடங்கள் எவ்வாறு கட்டப்பட்டன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று அமா்வு கூறியது.
மழைக்காலங்களில் கடுமையான நீா் தேங்குவது குறித்தும், வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டதால் சாலைகள், வீடுகள் மற்றும் அலுவலகங்கள் அடிக்கடி வெள்ளத்தில் மூழ்குவது குறித்தும் வழக்குரைஞா்கள் உள்பட குடியிருப்பாளா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.
இடிப்பின்போது சட்டம் ஒழுங்கை உறுதி செய்ய போதுமான போலீஸா் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.