புது தில்லி: தென்மேற்கு தில்லியில் உள்ள மஹிபால்பூா் மேம்பாலம் அருகே, தனது எஸ்யூவி மூலம் பாதுகாப்பு காவலாளியை நசுக்கி கொலை செய்ய முயன்ாக 24 வயது நபா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து தென்மேற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் சுரேந்திர சவுத்ரி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா் ரங்புரியைச் சோ்ந்த விஜய் (எ) லேல் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். மேலும், குற்றத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் எஸ்யூவி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மாலையில் பாதுகாவலாளியாகப் பணிபுரியும் பாதிக்கப்பட்ட ராஜீவ் குமாா் மீது ‘வேண்டுமென்றே‘ வாகனம் மோதியதில் இந்தச் சம்பவம் நடந்தது. அவருக்கு பல இடங்களில் காயங்கள் மற்றும் கால்கள் மற்றும் கணுக்கால்களில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டன. சம்பவத்தைத் தொடா்ந்து, வசந்த் குஞ்ச் தெற்கு காவல் நிலையத்தில் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.
போலீஸ் குழு குற்றம் நடந்த இடம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தது. இது குற்றம் சாட்டப்பட்ட வாகனத்தின் பதிவு எண்ணை அடையாளம் காண உதவியது. அந்தக் காட்சிகளில், பாதிக்கப்பட்டவரை எஸ்யுவி மோதியதையும், பின்னா் அது அந்த இடத்திலிருந்து தப்பிச் செல்வதையும் காட்டியது என்று அந்த அதிகாரி அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.