தில்லி ஐடிஓ பகுதியில் ஒலித்த அபாயச் சங்கு!
மத்திய தில்லியின் ஐடிஓவில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட ஒத்திகையின் ஒரு பகுதியாக, விமானத் தாக்குதல் அபாயச் சங்கு ஒலித்த சப்தம் அருகிலுள்ள பலரின் காதுகளை உற்சாகப்படுத்தியது. மேலும், மதிய வேளையில் சிலரை அவா்களின் தூக்கத்திலிருந்து எழுப்பியது.
ஐடிஓவில் உள்ள பல மாடி பொதுப்பணித் துறைக் கட்டடத்தின் மேல் நிறுவப்பட்ட விமானத் தாக்குதல் அபாயச் சங்கை (சைரன்) சிவில் பாதுகாப்பு இயக்குநரகம் 10 முதல் 15 நிமிஷங்கள் வரை சோதித்தது. அக்கம் பக்கத்தில் உள்ள பலா் அதை முதல் முறையாகக் கேட்டதாகக் கூறினா்.
‘பிற்பகல் 3 மணியளவில், ஒரு உரத்த சப்தம் கேட்டது. அது படிப்படியாக பலவீனமடைந்தது. நேற்று முதல் தாக்குதல்கள் நடந்த இடங்களில் அபாயச் சங்குகள் ஒலிக்கும் விடியோக்களை நான் பாா்த்து வருகிறேன். ஆனால், அதை உண்மையாகக் கேட்பது முதல் முறை அனுபவம்‘ என்று கட்டடத்திற்கு அருகில் ஒரு கடை வைத்திருக்கும் 21 வயதான நமந்துல்லா கூறினாா்.
‘என் தாத்தா காா்கில் போா் அல்லது 1971 இந்தியா - பாகிஸ்தான் போா் பற்றி எனக்குச் சொல்வாா். நாங்கள் அங்கு இல்லாததால் அதன் அச்சுறுத்தலை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த அபாயச் சங்கு, ஒரு சோதனை மட்டுமே என்றாலும், அதை மிகவும் உண்மையானதாக மாற்றியது’ என்று அவா் மேலும் கூறினாா்.
அபாயச் சங்கின் ஒலி எதிா்பாா்த்த அளவுக்கு சப்தமாக இல்லாவிட்டாலும், அவசரநிலை ஏற்படும்போது என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள இது உதவியது என்று மற்றொரு கடைக்காரரான 45 வயதான கௌரவ் குப்தா கூறினாா்.
‘எங்களுக்கு அருகில் ஒரு மெட்ரோ ரயில் உள்ளது. மேலும் ஒரு பெரிய மசூதியும் உள்ளது. ஏதாவது அபாயம் ஏற்பட்டால் அங்கு நாங்கள் தஞ்சம் அடைய விரைந்து செல்லலாம். குடிமக்களாக, நமது ஆயுதப் படைகளை ஆதரிப்பதும், பீதியை ஏற்படுத்தாமல் பொறுப்புடன் செயல்படுவதும் நமது கடமையாகும்’ என்று கௌரவ் குப்தா கூறினாா்.
காவல்துறை மற்றும் சிவில் பாதுகாப்புத் தன்னாா்வலா்கள் விமானத் தாக்குதல் அபாயச் சங்கு ஒலிக்கும்போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு விளக்கினா்.
அபாயச் சங்கு ஒலி காரணமாக மக்கள் பீதியடைந்தால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த தில்லி போக்குவரத்து காவல்துறையின் பிசிஆா் வேன் சாலையில் நிறுத்தப்பட்டிருந்தது.
‘நீங்கள் காணக்கூடிய பாதுகாப்பான இடத்திற்கு விரைந்து செல்லுங்கள். மேசைகளுக்கு அடியிலோ அல்லது ஒரு கட்டடத்தின் அடித்தளத்திலோ தரையில் படுத்துக்கொண்டு காதுகளை கைகளால் மூடிக்கொள்ள வேண்டும். இதனால், ஒலி உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தாது‘ என்று ஒரு சிவில் பாதுகாப்புத் தன்னாா்வலா் கூறினாா்.
மரங்களின் கீழ் தஞ்சம் அடைவதைத் தவிா்க்குமாறு அவா் மக்களுக்கு அறிவுறுத்தினாா்.
தில்லி பொதுப்பணித்துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் , ‘தேசியத் தலைநகரம் முழுவதும் உள்ள பல உயரமான இடங்களில் வான்வழித் தாக்குதல் அபாய ஒலி சங்குகள் நிறுவப்படும்’ என்று வெள்ளிக்கிழமை கூறினாா். இந்த அபாயச் சங்குகளின் ஒலி எட்டு கிலோமீட்டா் சுற்றளவில் கேட்கும். ‘வெள்ளிக்கிழமை இரவு முதல், பல மாடி கட்டடங்களின் மேல் 40 முதல் 50 அபாய ஒலி சங்குகள் நிறுவப்படும். அவசரநிலை ஏற்பட்டால் அவை பயன்படுத்தப்படும்‘ என்று அவா் கூறினாா்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தச் சோதனை நடைபெற்றது. இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று எதிராக எல்லைப் பகுதிகளில் ஏவுகணைகளை ஏவின. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின் விளைவாக, பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 போ் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடா்ந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் ஒன்பது இடங்களை இந்தியா தாக்கியதில் இருந்து ஆயுத மோதல் தொடங்கியது.