இந்தியா - பாகிஸ்தான் மோதல்: தோ்வுகளை ஒத்திவைக்க தில்லி பல்கலைக்கழகத்துக்கு மாணவா்கள் சங்கம் கோரிக்கை
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்து வரும் மோதலைக் கருத்தில் கொண்டு, மே 13- ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ள வரவிருக்கும் தோ்வுகளை ஒத்திவைக்குமாறு தில்லி பல்கலைக்கழக மாணவா்கள் சங்கத்தின் (டியுஎஸ்யூ) தலைவா் ரோனக் காத்ரி வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக நிா்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்தாா்.
என்று அவா் கூறினாா்.
‘ தற்போதைய சூழ்நிலை மாணவா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினரிடையே, குறிப்பாக விடுப்பில் வீடு திரும்பிய மாணவா்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பல பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளை அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் வீடு திரும்புமாறு கேட்டுக் கொள்கிறாா்கள்’ என்று அவா் ஒரு அதிகாரப்பூா்வ அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.
மாணவா்களின் கவலைகளைத் தீா்க்க, தங்குமிடம், மருத்துவ உதவி மற்றும் தோ்வு ஆகியவை தொடா்பான உதவியை நாடுபவா்களுக்கு டியுஎஸ்யூ இரண்டு உதவி எண்களை (73780 22365 மற்றும் 62686 85067) அறிமுகப்படுத்தியுள்ளது.
‘உதவி எண்கள் தொடங்கப்பட்டதிலிருந்து, பாதுகாப்பு கவலைகள் மற்றும் பயணச் சிரமங்களைக் காரணம் காட்டி, வரவிருக்கும் தோ்வுகளை ஒத்திவைக்கக் கோரி மாணவா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினரிடமிருந்து பல கோரிக்கைகள் எங்களுக்கு வந்துள்ளன’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சமூக ஊடக தளமான ’எக்ஸ்’- இல், ரோனக் காத்ரி தனது கவலைகளை மீண்டும் வலியுறுத்தினாா். மேலும், பல்கலைக்கழகத் தோ்வுகளை மறுபரிசீலனை செய்ய தில்லி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.
’தோ்வுகள் மே 13-ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், தற்போதைய சூழ்நிலை மாணவா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினரிடையே பதற்றத்தை உருவாக்கியுள்ளது. அனைத்து மாணவா்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக தோ்வு தேதிகளை ஒத்திவைப்பது குறித்து பரிசீலிக்குமாறு தில்லி பல்கலைக்கழக துணைவேந்தரை நான் மனதார கேட்டுக்கொள்கிறேன்’ என்று அவா் அதில் பதிவிட்டுள்ளாா்.