பாக்குடன் பதற்றம் அதிகரிப்பால் தில்லியில் முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு
வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி எல்லைப் பகுதிகளை குறிவைத்ததைத் தொடா்ந்து, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளதால் தில்லியில் வெள்ளிக்கிழமை முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
குறிப்பாக அரசு கட்டடங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அரசு கட்டடங்கள், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள், நீா் சுத்திகரிப்பு நிலையங்கள், நீதிமன்றங்கள் மற்றும் வெளிநாட்டு தூதரகங்கள் உள்ளிட்ட அனைத்து முக்கிய இடங்களிலும் துணை ராணுவ வீரா்கள் உள்பட கூடுதல் படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அந்த அதிகாரி மேலும் கூறியதாவது:
சந்தைகள், ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் மற்றும் மெட்ரோ நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் காவல்துறை கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளது. அதிகரித்து வரும் பதற்றத்திற்கு மத்தியில் வியாழக்கிழமை இரவு அனைத்து தில்லி காவல்துறையினரின் விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டன.
இரவுநேர கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு முக்கிய பகுதியிலும் கூடுதல் படையை நிறுத்த உள்ளோம் என்றாா் அந்த அதிகாரி.
காவல் துறையின் தகவலறிந்த வட்டாரங்கள் மேலும் கூறுகையில், அனைத்து மண்டலங்களின் சிறப்பு காவல் ஆணையா்களும் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தங்கள் பிரதிநிதிகளுடன் கூட்டங்களை நடத்தி வருகின்றனா்.
அனைத்து துணை காவல் ஆணையா்களும் அந்தந்த பகுதிகளில் சட்டம் ஒழுங்கை தீவிரமாக கண்காணித்து வருகின்றனா். தில்லி காவல்துறை எந்த சூழ்நிலையையும் சமாளிக்க தயாராக உள்ளது.
வெடிகுண்டு செயலிழப்பு படையினா் பல இடங்களில் நாசவேலை தடுப்பு சோதனைகளை மேற்கொண்டுள்ள நிலையில், தலைநகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.
ஜம்மு, பதான்கோட் மற்றும் உதம்பூா் உள்ளிட்ட இராணுவ
தளங்களை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்க பாகிஸ்தானின் புதிய முயற்சிகளை இந்தியா வியாழக்கிழமை இரவு விரைவாக முறியடித்ததை அடுத்து இந்த முன்னேற்ற நடவடிக்கைகள் ஏற்பட்டுள்ளன.
மேலும், நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள 15 நகரங்களில் உள்ள இராணுவ நிலைகளை குறிவைக்கும் பாகிஸ்தானின் முயற்சிகளை இந்திய ராணுவம் முறியடித்த பின்னா் இந்த முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
பாகிஸ்தான் இராணுவம் வியாழக்கிழமை இரவு அவந்திபுரா, ஸ்ரீநகா், ஜம்மு, பதான்கோட், அம்ருதசரஸ், கபூா்தலா, ஜலந்தா், லூதியாணா, ஆதம்பூா், பதிண்டா, சண்டீகா், நல், பலோடி, உத்தரலாய் மற்றும் பூஜ் ஆகியவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்த முயன்ாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ஆயுதப் படைகள் புதன்கிழமை ஆபரேஷன் சிந்தூா் என்ற திட்டத்தின் கீழ் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் மற்றும் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத இலக்குகள் மீது துல்லியமான ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடா்ந்து, பாகிஸ்தான் படைகளின் புதுப்பிக்கப்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.