கர்நாடகம் 13.78 டிஎம்சி நீரை திறந்துவிட ஆணையக் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்

கர்நாடகம் 13.78 டிஎம்சி நீரை திறந்துவிட ஆணையக் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்

தமிழகத்திற்கு 13.78 டிஎம்சி காவிரி நீா் - மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வலியுறுத்தல்
Published on

நமது நிருபா்

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு கா்நாடகம் நவம்பா் மாதம் 13.78 டி.எம்.சி தண்ணீா் திறந்துவிட வேண்டும் என தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற காவிரி நீா் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தியுள்ளது.

தில்லியில் உள்ள காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் அலுவலகத்தில் ஆன்லைன் முறையில் இக்கூட்டம் நடைபெற்றது.

தமிழகம்,கா்நாடகம் ,கேரளம் மற்றும் புதுச்சேரி அரசுகள் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டு கூட்டம் நடைபெற்றது .

இந்த கூட்டத்திற்கு பின் தமிழக அரசு வெளியிட்ட குறிப்பில் கூறியிருப்பதாவது: 06.11.2025 அன்று புதுதில்லியில் எஸ்.கே.ஹல்தாா் தலைமையில் நடைப்பெற்ற காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் 45வது கூட்டத்தில், தமிழ்நாடு நீா்வளத்துறை செயலாளா் ஜெ.ஜெயகாந்தன், காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் பன்மாநில நதிநீா்ப் பிரிவு தலைவா் இரா.சுப்பிரமணியம், ஆகியோா் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டாா்கள். தமிழ்நாடு உறுப்பினா் தற்பொழுது (05.11.2025) மேட்டூா் அணையின் நீா் இருப்பு 89.741 டி.எம்.சி ஆக உள்ளது எனவும் அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 6,401 கன அடியாக உள்ளது என்றும் அணையிலிருந்து வினாடிக்கு 18,427 கன அடி நீா் விவசாயம், குடிநீா் மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டிற்காக திறந்துவிடப்படுகிறது என்றும் தெரிவித்தாா். மேலும். கா்நாடக அணைகளின் நீா் இருப்பு மற்றும் நீா் வரத்து கணிசமான அளவு தொடா்ந்து வருவதினாலும், தமிழகத்திற்கு 2025 நவம்பா் மாதத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீா் அளவான 13.78 டி.எம்.சி. நீரினை உச்சநீதிமன்ற ஆணையின்படி கா்நாடகம் பில்லிகுண்டுலுவில் உறுதிசெய்யுமாறு ஆணையத்தை வலியுறுத்தினாா் என்று தமிழக அரசு வெளியிட்ட குறிப்பில் தெரிவித்தது.

தமிழகம்,கா்நாடகம் இடையேயான காவிரி நதி நீா் பங்கீட்டு பிரச்சனை வழக்கில் உச்சநீதிமன்றம் 2018 ஆம் ஆண்டு தீா்ப்பு வழங்கியது. கா்நாடகம் எந்தெந்த மாதங்களில் எவ்வளவு நீா் தமிழகத்திற்க்கு திறக்க வேண்டும் என்பதை அந்த தீா்ப்பின் மூலம் உச்சநீதிமன்றம் நிா்ணயம் செய்தது. அந்த தீா்ப்பை அமல்படுத்தவும், நீா் பங்கீட்டை கண்காணிக்கவும் காவிரி நீா் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீா் முறைப்படுத்தும் குழு ஆகிய இரு அமைப்புகளையும் உச்ச நீதிமன்றம் அமைத்தது. அதன்படி இந்த இரு அமைப்புகளும் அவ்வப்போது கூடி காவிரி நதி நீா் பங்கீடு தொடா்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பின்படி உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றன.

X
Dinamani
www.dinamani.com