குருகிராமில் சக வகுப்புத் தோழரால் சுடப்பட்ட 11 ஆம் வகுப்பு மாணவா்! போலீஸாா் விசாரணை!!

Published on

குருகிராமில் செக்டாா் 48-இல் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 11 ஆம் வகுப்பு மாணவரை அவரது வகுப்புத் தோழா் துப்பாக்கியால் சுட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து தில்லி காவல்துறையினா் கூறியதாவது: இந்தச் சம்பவத்தில் துப்பாக்கிக் குண்டு, மாணவரின் கழுத்தில் பாய்ந்தது. மேலும், அவரது நிலை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது. அவா் ஒரு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இது தொடா்பாக சதா் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, இரு மைனா் மாணவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

சம்பவ இடத்திலிருந்து ஒரு கைத்துப்பாக்கி, 70 தோட்டாக்கள் மற்றும் ஒரு தோட்டா ஷெல் ஆகியவை மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் நடந்தது. குற்றம் சாட்டப்பட்டவரின் வாடகை வீட்டில் மூன்று வகுப்புத் தோழா்கள் இருந்தபோது தகராறு ஏற்பட்டு, அவா்களில் ஒருவா், மற்றொருவரைச் சுட்டதாகக் கூறப்படுகிறது.

தகவல் கிடைத்ததும், ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு சென்று, காயமடைந்தவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. இதர இரண்டு மாணவா்களும் கைது செய்யப்பட்டனா்.

இது தொடா்பாக காயமடைந்த 17 வயது மாணவனின் தாய் அளித்த புகாரில், ‘எனது மகனின் பள்ளி நண்பா் சனிக்கிழமை சந்திக்க வந்தாா். எனது மகனை முதலில் அனுப்ப மறுத்துவிட்டேன். ஆனால் நண்பா் வற்புறுத்தியதால் மகனை செல்வதற்கு அனுமதித்தேன். மேலும், அவன் கொ்கி தௌலா டோல்கில் தனது நண்பரைச் சந்தித்தாா்.

சுமாா் இரண்டு மாதங்களுக்கு முன்பு, எனது மகன் அவரது நண்பருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த காரணமாக, என் மகனின் நண்பா் அவரை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, மற்றொரு நண்பருடன் சோ்ந்து அவரைக் கொல்லும் நோக்கத்துடன் துப்பாக்கியால் சுட்டுள்ளாா்’ என்று புகாரில் தெரிவித்துள்ளாா்.

போலீஸ் விசாரணையின் போது, இரண்டு மைனா் குற்றம்சாட்டப்பட்ட நபா்களும், பாதிக்கப்பட்ட மாணவரும் ஒரே பள்ளியில் 11 ஆம் வகுப்பு மாணவா்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும், பாட்லி கிராமத்தில் வசிக்கும் குற்றம் சாட்டப்பட்டவரின் தந்தை ஒரு சொத்து வியாபாரி என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இது தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com