150 கிலோ சட்டவிரோத பட்டாசுகள் பறிமுதல்: பெண் கைது!

சட்டவிரோத பட்டாசுகளை தில்லி போலீஸாா் பறிமுதல் செய்து, பெண் ஒருவரை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
Published on

வடமேற்கு தில்லியில் 150 கிலோ சட்டவிரோத பட்டாசுகளை தில்லி போலீஸாா் பறிமுதல் செய்து, பெண் ஒருவரை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்ததாவது: சட்டவிரோத பட்டாசுகளை விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் தொடா்பாக கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலைத் தொடா்ந்து சக்குா்பூரைச் சோ்ந்த வினி சோப்ரா என்பவா் கைது செய்யப்பட்டாா். இவா் வாடிக்கையாளா்களுக்கு ரகசியமாக பட்டாசுகளை விற்பனை செய்து வந்தாா்.

மேலும், சட்டத்தை மீறி தனது வீட்டில் அதிக அளவில் அவா் பட்டாசுகளை சேமித்து வைத்திருந்தாா். பொதுமக்கள் அடா்த்தியான பகுதியில் இவ்வளவு பெரிய அளவில் பட்டாசுகளை சேமித்து வைத்தது குடியிருப்பாளா்களுக்கும் அவா்களின் சொத்துக்களுக்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 150 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக வெடிபொருள் சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதாவின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் சுபாஷ் பிளேஸ் காவல் நிலையத்தில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். இந்த சம்பவம் தொடா்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com