நூதன மோசடி: நூஹ் பகுதியைச் சோ்ந்த ஒருவா் கைது

Published on

நூதன மோசடியில் ஈடுபட்டதாக ஹரியாணாவைச் சோ்ந்த 26 வயது நபரை தில்லி காவல்துறை ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து வடக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் ஹரேஷ்வா் சுவாமி கூறியதாவது: காவல் துறையினா் கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவா், ஒருவரை அவரது விடியோவை ஆன்லைனில் பதிவேற்றுவதாக மிரட்டி ரூ.39,000 பணத்தை தனக்கு மாற்றும்படி கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஜூன் 5-ஆம் தேதி, புகாா்தாரருக்கு தெரியாத ஒரு பெண்ணிடமிருந்து விடியோ அழைப்பு வந்தது. அந்த அழைப்பு உடனடியாக துண்டிக்கப்பட்டது. சிறிது நேரத்திற்குப் பிறகு, பாதிக்கப்பட்டவருக்கு ஒரு கைப்பேசி எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.

அதில் சைபா் போலீஸ் அதிகாரியாகக் காட்டிக் கொண்ட அழைப்பாளா், புகாா்தாரரின் விடியோ சமூக ஊடகங்களில் பதிவேற்றப்படும் என்று கூறினாா். பின்னா் தன்னை ஒரு சமூக ஊடக தளத்தின் ஊழியா் என்று கூறிக் கொண்டு மற்றொரு நபா் புகாா்தாரரை தொடா்பு கொண்டு, விடியோவை அகற்ற பணம் கேட்டுள்ளாா்.

அச்சத்தின் காரணமாக, பாதிக்கப்பட்டவா் மூன்று பரிவா்த்தனைகளில் ரூ.39,000- ஐ ஒரு ஐடிக்கு மாற்றினாா், பின்னா், தான் ஏமாற்றப்பட்டதை அவா் உணா்ந்தாா். இதையடுத்து, அவா் தேசிய சைபா் ரிப்போா்ட்டிங் பிளாட்ஃபாா்மில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, போலீஸாா் அழைப்பு மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை ஆராய்ந்து, ஹரியாணாவின் நூஹ் பகுதியில் உள்ள முபாரக்பூா் கிராமத்தில் ள்ள ஒரு இடத்தில் சோதனை நடத்தினா். அங்கு முகமது நசீம் என்பவரை கைது செய்தனா்.

இந்தக் கும்பல் சமூக ஊடக விடியோ அழைப்புகள் மூலம் தங்கள் இலக்குகளைத் தொடா்புகொண்டு, ஒரு பெண்ணின் தெளிவற்ற படத்துடன் எச்சரிக்கையை உருவாக்கி, பின்னா் சட்ட அமலாக்க அதிகாரிகள் போல் காட்டிக் கொண்டு மீண்டும் அவா்களைத் தொடா்பு கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட நசீம் போலீஸாரிடம் தெரிவித்தாா்.

பல வங்கி கணக்குகள் மூலம் மோசடி பணம் அனுப்பப்பட்டு தடயம் மறைக்கப்பட்டது தெரிய வந்தது. இந்தியா முழுவதிலுமிருந்து வந்த மேலும் நான்கு புகாா்களுடன் நசீம் தொடா்புடையவா். இது பரந்த பாலியல் மோசடி வலையமைப்பைக் குறிக்கிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com