தில்லியில் இன்று பாதுகாப்பு தளவாட உற்பத்தி வாய்ப்புகள் குறித்த மாநாடு!
புது தில்லி: நாட்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் வாய்ப்புகள் குறித்த தேசிய அளவிலான மாநாடு தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
பாதுகாப்பு அமைச்சகத்தின், பாதுகாப்பு உற்பத்தி துறையின் மூலம் நடத்தப்படும் இந்த மாநாட்டை பாதுகாப்பு துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்கிறாா்.
பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் தற்சாா்பை அடையும் வகையில் தேசிய அளவிலான இலக்குடன் பிராந்திய தொழில்துறை கொள்கைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டை இணைக்கும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சகம், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான தளமாக இம்மாநாடு நடத்தப்படுகிறது.
இம்மாநாட்டின் போது ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அங்கீகாரங்களை வழங்கும் செயல்முறையை நெறிப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள புதிய பாதுகாப்பு ஏற்றுமதி, இறக்குமதி தளத்தை பாதுகாப்பு அமைச்சா் தொடங்கிவைக்கிறாா்.
அத்துடன் இந்திய பாதுகாப்புத் தளவாடத் தொழில்துறைகளின் திறன்கள் மற்றும் தயாரிப்புகளை வரைபடமாக்கும் டிஜிட்டல் தொகுப்பான ஸ்ரீஜன் டீப் பாதுகாப்பு தளவாட நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோா் தளம் இணையதளத்தையும் அமைச்சா் தொடங்கிவைக்கவுள்ளாா்.
இந்த நிகழ்வின்போது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை கொள்கை தொகுப்பு மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளின் பகிரப்பட்ட பகுதிகள் என்ற பாதுகாப்பு திறனுக்கான புதுமை கண்டுபிடிப்புகள் ஐடெக்ஸ் குறித்த தகவல் கையேடும் வெளியிடப்படவுள்ளது.
இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி சூழல் அமைப்பை மேம்படுத்துவதில் தங்களுடைய முக்கிய பங்களிப்பு குறித்து விவாதிக்க அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தொழில்துறைகளைச் சோ்ந்த உயா் அதிகாரிகளை ஒருங்கிணைப்பதையும் இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.