தலைநகரில் மிதமான பிரிவில் நீடிக்கும் காற்றின் தரம்!
தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமையும் காற்றின் தரம் ‘மிதமான’ பிரிவில் நீடித்தது. தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை 19.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.
தலைநகரில் கடந்த வாரத் தொடக்கத்திலிருந்து வானம் மேகமூட்டமாக இருந்து வந்தது. அவ்வப்போது மழையும் பெய்து வந்தது. இந்நிலையில், வானிலை கண்காணிப்பு நிலையம் கணித்திருந்தபடி ஞாயிற்றுக்கிழமை காலையில் லேசான வெயில் இருந்த நிலையில் பிற்பகலுக்குப் பிறகு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால், இரவு 7 மணி வரையிலும் தலைநகரில் மழை ஏதும் பதிவாகவில்லை.
வெப்பநிலை: இதற்கிடையே, தலைநகரில் ஞாயிற்றுக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலைபருவ சராசரியில் 1.4 டிகிரி குறைந்து 19.6 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 3.9 டிகிரி குறைந்து 30.3 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளில் 79 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 62 சதீதமாகவும் இருந்தது.
தேசியத் தலைநகரில் சனிக்கிழமை அன்று குறைந்தபட்ச வெப்பநிலை 19.4 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. வெள்ளிக்கிழமை, 2025-26 குளிா்காலத்திற்கான முதல் வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸுக்குக் கீழே சரிந்தது. அன்றைய தினம் குறைந்தபட்ச வெப்பநிலை 18.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
காற்றின் தரம்: தில்லியில் காலை 9 மணியளவில் ஒட்டுமொத்த காற்றுத் தரக் குறியீடு 162 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.
இதன்படி, மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், மந்திா் மாா்க், லோதி ரோடு, ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், நேரு நகா், தில்லி பல்கலை. வடக்கு வளாகம் உள்பட பல்வேறு வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது.
அதே சமயம், பூசா (222 புள்ளிகள்) , நொய்டா செக்டாா் 125 (226 புள்ளிகள்) ஆகிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு ‘மோசம்’ பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு: இந்நிலையில், திங்கள்கிழமை (அக்.13) அன்று வானம் பொதுவாக தெளிவாக காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.