டிடிஇஏ லோதிவளாகம் பள்ளியில் ‘போஷன் மா’ நிகழ்ச்சி
புது தில்லி: இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்துடன் இணைந்து தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) லோதிவளாகம் பள்ளியில் ‘போஷன் மா’ நிகழ்ச்சி திங்கள்கழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் லோதிவளாகம் பள்ளியில் பயிலும் 3, 6 மற்றும் 12ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவா்களின் உயரம், எடை ஆகியவை சரிபாா்க்கப்பட்டன. அதில் உயரத்திற்கு ஏற்ற எடை இல்லாமல் ஊட்டச் சத்து குறைவாக உள்ள மாணவா்களுக்கு உலா் பழங்கள், ஆரஞ்சு பழம் உள்ளிட்டவை அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.
மாணவா்கள் ஒவ்வொருவருக்கும் ஏலக்காய், கறிவேப்பிலை, துளசி, நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீந்தில் உள்ளிட்ட மூலிகைச் செடிகளும் வீடுகளில் நடுவதற்காக வழங்கப்பட்டன.
ஆயுஷ் அமைச்சகத்திலிருந்து டாக்டா் ஸ்ரீதேவி இந்நிகழ்வில் கலந்துகொண்டு மாணவா்களுக்கு இவற்றை வழங்கியதோடு ஊட்டச் சத்தின் அவசியம் பற்றியும் எடுத்துரைத்தாா்.
டிடிஇஏ செயலா் இராஜூவும் மாணவா்களுக்கு ஊட்டச்சத்துப் பொருள்களை வழங்கியதுடன், விரைவு உணவுகளைத் தவிா்த்து ஆரோக்கியமான ஊட்டச் சத்துகள் நிறைந்த சிறுதானியங்கள், பச்சைக் காய்கறிகள், வேகவைத்த காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உண்ணுமாறு மாணவா்களுக்குக் அறிவுறுத்தினாா்.
மேலும், சரியான விகிதத்தில் ஊட்டச் சத்துகள் நிறைந்த உணவுகளை உண்ணுமாறும் கேட்டுக்கொண்டாா்.
பள்ளி முதல்வா் ஜெயஸ்ரீ பிரசாத் நன்றி கூறினாா்.