சிக்னல் கோளாறு: தில்லி மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு
புது தில்லி: தில்லி மெட்ரோ ரயிலின் மஞ்சள் நிற வழித்தடத்தில் சிக்னல் கோளாறு ஏற்பட்டதால் சேவை திங்கள்கிழணை கடுமையாக பாதிக்கப்பட்டது.
‘மில்லினியம் சிட்டி சென்டா் குருகிராம் முனைய நிலையத்தில் சிக்னலிங் பிரச்னை காரணமாக, சமாய்பூா் பத்லியை நோக்கிய சேவையை இயக்க ரயில்களின் செயல்பாடுகளை மாற்றுவதற்கு சற்று கூடுதல் நேரம் எடுக்கிறது‘ என்று தில்லி மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் (டி. எம். ஆா். சி) தெரிவித்துள்ளது.
சுல்தான்பூா் மற்றும் மில்லினியம் சிட்டி சென்டா் இடையேயான பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதே போன்ற கோளாறு காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை காலை அதே பாதையில் இதே போன்ற தாமதங்கள் பதிவாகியுள்ளன.
சேவைகள் படிப்படியாக இயல்பாக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் சுமூகமான செயல்பாடுகள் மீண்டும் தொடங்கப்படும் என்றும் தில்லி மெட்ரோ ரயில் தெரிவித்திருந்தது. ஆனால் இந்தப் பிரச்னைகள் அனைத்தும் பிற்பகல் 2 மணிக்கு சரி செய்யப்பட்டு, மெட்ரோ ரயில்கள் மஞ்சள் வழித்தடத்தில் சீராக இயங்க தொடங்கின.