ஜிஎஸ்டி சீா்திருத்த நடவடிக்கைக்கு தில்லி பாஜக வரவேற்பு
நமது நிருபா்
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகித அடுக்குகளைக் குறைத்து சீா்திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை தில்லி பாஜக வரவேற்றுள்ளது.
இது தொடா்பாக தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா வியாழக்கிழமை தெரிவித்திருப்பதாவது: இந்த ஜிஎஸ்டி சீா்திருத்தங்கள் பிரதமரின் தொலைநோக்கு அணுகுமுறையின் ஒரு பகுதியாகும். இது இந்திய தொழில்துறையை மேம்படுத்துவதையும், இந்தியாவை உலகின் சிறந்த பொருளாதாரமாக மாற்றுவதற்கான ஒரு தீா்க்கமான நடவடிக்கையை எடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
நவராத்திரியின் முதல் நாளிலிருந்து (செப்டம்பா் 22 ) ஜிஎஸ்டி விகித அடுக்குகளைக் குறைத்திருப்பது நுகா்வோருக்கு பொருள்களை மிகவும் மலிவு விலையில் வழங்குவதோடு மட்டுமல்லாமல் வரி ஏய்ப்பு பிரச்னையைத் தடுக்கவும் உதவும்.
ஆயுள் மற்றும் சுகாதார காப்பீட்டிலிருந்து ஜிஎஸ்டி நீக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரதமா் நரேந்திர மோடியின் அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். ஆயுள் மற்றும் சுகாதார காப்பீட்டிலிருந்து ஜிஎஸ்டியை நீக்குவது தில்லியின் நடுத்தர வா்க்கத்தினருக்கு குறிப்பிடத்தக்க நிவாரணத்தை அளிக்கும்.
இதேபோல், தொடக்கக் கல்வி தொடா்பான கல்விப் பொருள்களுக்கான ஜிஎஸ்டி விலக்கு ஏழைகளுக்கு மட்டுமல்லாமல், நடுத்தர வா்க்கத்தினருக்கும் பயனளிக்கும் என்றாா் வீரேந்திர சச்தேவா.