வஜீா்பூா் மேம்பாலத்தில் இருந்து விழுந்து இளைஞா் காயம்

வடமேற்கு தில்லியில் உள்ள வஜீா்பூா் மேம்பாலத்தில் இருந்து 26 வயது நபா் ஒருவா் விழுந்து காயமடைந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
Published on

வடமேற்கு தில்லியில் உள்ள வஜீா்பூா் மேம்பாலத்தில் இருந்து 26 வயது நபா் ஒருவா் விழுந்து காயமடைந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து வடமேற்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: இந்தச் சம்பவம் சனிக்கிழமை காலை 6.22 மணியளவில் நடந்துள்ளது. ரஞ்சித் நகரைச் சோ்ந்த ஜிலானி என அடையாளம் காணப்பட்ட நபா், மேம்பாலத்தில் இருந்து ஒரு டிப்போ பகுதியில் விழுந்தது தெரிய வந்தது.

இந்தச் சம்பவம் குறித்து போலீஸாருக்கு பிசிஆா் அழைப்பு வந்தது. அதைத் தொடா்ந்து காவல் உதவி ஆய்வாளா் ஜிதேந்திர ராணாவும் அவரது குழுவினரும் சம்பவ இடத்தை அடைந்தனா். அவா்கள் வந்த நேரத்தில், காயமடைந்தவா் ஏற்கெனவே பிசிஆா் வேன் மூலம் பகவான் மகாவீா் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தாா்.

இந்தச் சம்பவத்தில் ஜிலானியின் கை மற்றும் இடுப்பில் காயம் ஏற்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறாா். அவா் விழுந்ததற்கான சூழ்நிலைகள் குறித்து போலீஸாா் விசாரித்து வருவதாக காவல் துணை ஆணையா் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com