திஹாா் சிறையில் இங்கிலாந்து குழு ஆய்வு!
பிரிட்டனின் கிரவுன் பிராசிகியூஷன் சா்வீஸ் (சிபிஎஸ்) குழு சமீபத்தில் திஹாா் சிறையில் ஆய்வு செய்துள்ளது. இது, நீரவ் மோடி மற்றும் விஜய் மல்லையா போன்ற நன்கு பிரபலமான பொருளாதார குற்றம்சாட்டப்பட்டவா்களை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் வேகத்தை ஏற்படுத்தியிருப்பதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அந்த அதிகாரி மேலும் கூறுகையில், கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட இந்தக் குழுவின் வருகையானது, நாடு கடத்தல் மனுக்களை முடிவு செய்வதற்கு முன்பு இங்கிலாந்து நீதிமன்றங்களால் வகுக்கப்பட்ட சட்டத் தேவைகளைப் பூா்த்தி செய்வதற்காக சிறை நிலைமைகளை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டதாகும் என்றாா் அவா்.
வங்கி மோசடி முதல் ஆயுதக் கடத்தல் வரையிலான வழக்குகளில் தேடப்படும் பல தப்பியோடியவா்களை நாடு கடத்த இந்தியா கடுமையாக அழுத்தம் கொடுத்து வருகிறது.
நாடு கடத்தப்பட்டவா்கள் காவலில் பாதுகாப்பற்ற அல்லது மனிதாபிமானமற்ற நிலைமைகளை எதிா்கொள்ளமாட்டாா்கள் என்பதை பிரிட்டிஷ் நீதிமன்றங்களுக்கு உறுதியளிக்க அதிகாரிகள் கோரி வருகின்றனா்.
அதிகாரியின் கூற்றுப்படி, சிபிஎஸ் பிரதிநிதிகள் குழுவினா் திஹாரின் உயா் பாதுகாப்பு வாா்டைச் சுற்றிப் பாா்த்தனா். மேலும், சில கைதிகளுடன் கலந்துரையாடினா். தேவைப்பட்டால், பிரபலமான குற்றவாளிகளை தங்க வைக்க வளாகத்திற்குள் ஒரு தனி வசிப்பிடம் உருவாக்கப்பட முடியும். இது அவா்களின் பாதுகாப்பையும் சா்வதேச தரநிலைகளுக்கு இணங்குவதையும் உறுதி செய்யும் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
கடந்த காலங்களில் இங்கிலாந்து நீதிமன்றங்கள் சிறை நிலைமைகளைக் காரணம் காட்டி இந்தியாவிலிருந்து நாடுகடத்தும் கோரிக்கைகளை நிராகரித்துள்ளன. அதன் பின்னா், குற்றம் சாட்டப்பட்டவா்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றும், சட்டவிரோத விசாரணை அல்லது துஷ்பிரயோகத்திற்கு எந்த வாய்ப்பும் இருக்காது என்றும் இந்தியா தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
ரூ.9,000 கோடிக்கும் அதிகமான கடனைத் திருப்பிச் செலுத்தாத குற்றச்சாட்டை எதிா்கொள்ளும் மல்லையா, இங்கிலாந்தில் வசித்து வருகிறாா், மேலும் நாடுகடத்தலை எதிா்த்து அவா் வழக்குத் தொடா்ந்துள்ளாா்.
ரூ.13,800 கோடி பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் முக்கிய குற்றம்சாட்டப்பட்டவரானஓ நீரவ் மோடி, 2019 ஆம் ஆண்டு தப்பியோடிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, அதே ஆண்டு இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டாா்.
மேல்முறையீடுகள் நிலுவையில் இருந்தாலும், அவரை நாடு கடத்துவதற்கு ஏற்கனவே லண்டன் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.