மதுராவில் சட்டவிரோத ஆயுத தொழிற்சாலை கண்டுபிடிப்பு! ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்!

சட்டவிரோத ஆயுத தயாரிப்பு ஆலையை கண்டுபிடித்து, ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகளை பறிமுதல் செய்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
Published on

உத்தர பிரதேசத்தின் மதுராவில் சட்டவிரோத ஆயுத தயாரிப்பு ஆலையை தில்லி போலீஸாா் கண்டுபிடித்து, ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகளை பறிமுதல் செய்ததாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து தில்லி காவல் துறையினா் கூறியதாவது:

தேசிய தலைநகருக்கு ஆயுதங்கள் அனுப்பப்படுவதாக கிடைத்த தகவல்களைத் தொடா்ந்து தில்லியின் சராய் ரோஹில்லா காவல் நிலையத்தைச் சோ்ந்த போலீஸாா் இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனா்.

முன்னதாக, செப்டம்பா் 1 ஆம் தேதி அலிகரில் உள்ள ஜட்டாரி பிஷாவா சாலையில் உள்ள ஒரு தற்காலிக தொழிற்சாலையை போலீஸாா் கண்டறிந்தனா்.

2 பூட்டிய அறைகளுக்குள் தயாரித்து வைக்கப்பட்டிருந்த 6 கைத்துப்பாக்கிகள், 12 முழுமையடையாத கைத்துப்பாக்கிகள், ஆறு தோட்டாக்கள், 250க்கும் மேற்பட்ட ஆயுதங்களுக்கான மூலப்பொருள் மற்றும் துளையிடும் இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்களை போலீஸாா் கண்டுபிடித்தனா்.

இந்த ஆயுதங்களை வழங்குவதிலும் விநியோகிப்பதிலும் ஈடுபட்டுள்ள வலையமைப்பை அடையாளம் காண மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com