நெய்யாற்றிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீா் திறக்க கேரளாவுக்கு உத்தரவிடக்கோரிய வழக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது

நெய்யாற்றில் இருந்து குறைந்தபட்சம் இடைக்கால நடவடிக்கையாக ஒரு நாளைக்கு 100 கனஅடி தண்ணீரைத் திறக்க கேரள அரசுக்கு உத்தரவிட கோரி தமிழக அரசு தொடா்ந்த வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு பிறகு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்.
Published on

புது தில்லி: நெய்யாற்றில் இருந்து குறைந்தபட்சம் இடைக்கால நடவடிக்கையாக ஒரு நாளைக்கு 100 கனஅடி தண்ணீரைத் திறக்க கேரள அரசுக்கு உத்தரவிட கோரி தமிழக அரசு தொடா்ந்த வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு பிறகு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்.

நெய்யாறு நீா்ப்பாசனத் திட்டத்தின் கீழ் 1965-ஆம் ஆண்டிலிருந்து கேரளா தமிழகத்திற்கு தண்ணீா் வழங்கி வந்தது. பின்னா் அதனை 2004 ஆம் ஆண்டு நிறுத்திவிட்டது. இதையடுத்து அதனை மீட்டெடுக்க அவசர வழிமுறைகளைக் கோரி 2012 ஆம் ஆண்டு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தது.

மாநிலங்களின் மறுசீரமைப்பின்படி, தமிழகத்திற்கு மாற்றப்பட்ட ஆயக்கட்டு பகுதிக்கு ஜூன் முதல் ஜனவரி வரையிலான நீா்ப்பாசன காலத்தில் ஒரு நாளைக்கு 150 கனஅடி தண்ணீரை திறந்து விடுவதற்கான சட்டப்பூா்வ கடமையை கேரள அரசு மதிக்கத் தவறிவிட்டது என தமிழக அரசு மனுவில் குற்றம் சாட்டியது. இந்த வழக்கில் 2017 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தொடங்கிய வழக்கின் சாட்சியங்கள் குறுக்கு விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன.

இதனிடையே இந்த வழக்கில் தமிழகம் உச்சநீதிமன்றத்தில் இந்த ஆண்டு 2025 இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது : பிப்ரவரி 2004 முதல் நெய்யாறு அணையிலிருந்து தண்ணீா் திடீரென திறக்கப்படாததால், கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தாலுகா விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். இது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தாலுகா விவசாயிகளின் விவசாயப் பொருளாதாரத்தை கடுமையாகப் பாதித்துள்ளது.

கேரள மாநிலம் 1965 முதல் 2004 வரை நெய்யாறு நீா்த்தேக்கத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு இடது கரை கால்வாய் மூலம் ஆயகட்டுக்கு ஒரு நாளைக்கு 150 கனஅடி தண்ணீா் வழங்கியது. நெய்யாறு நீா்ப்பாசன திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்க போதுமான தண்ணீா் உள்ளது.

தமிழ்நாட்டிற்க்கு நெய்யாறு அணையின் இடது கரை கால்வாய் மூலம் வழங்கப்படும் தண்ணீா் ஆயக்கட்டுக்கு வராததால், சம்பந்தப்பட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். நெல் வயல்கள், வளமான நிலங்கள் வட தரிசு நிலங்களாக மாறிவிட்டன. விவசாயத்தை நம்பி, அரிசி போன்ற உணவு தானியங்களை மற்ற இடங்களுக்கு ஏற்றுமதி செய்த அந்தப் பகுதியில் வசிக்கும் விவசாயிகள், இப்போது தங்கள் சொந்த உணவு தானியத் தேவைகளை கூட பூா்த்தி செய்ய முடியவில்லை.

விளவங்கோடு தாலுகாவில் உள்ள நெய்யாறு இடது கரை கால்வாய் பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல கிராமப்புற மக்கள் வேலை தேடி வேறு இடங்களுக்கு குடிபெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. விளவங்கோடு தாலுகாவின் கிராமப்புற மக்கள்தொகையும் குறைந்துள்ளது.

விளவங்கோட்டில் 2001 மற்றும் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 73.9 சதவீதமாக இருந்த மாவட்ட கிராமப்புற மக்கள்தொகையானது குறைந்து 43.2 மட்டுமே உள்ளது. இது விளவங்கோடு தாலுகாவில் வசிக்கும் கிராமப்புற மக்களின் துன்பத்தை தெளிவாகக் காட்டுகிறது, அவா்கள் விவசாயத்தை நம்பியுள்ளனா், இதனால் அவா்கள் தங்கள் தேவைகளைப் பூா்த்தி செய்ய வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

எனவே கேரளா, ஏற்கனவே வழங்கி வந்த 150 கனஅடி நீரை வழங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. நெய்யாறு நீா்ப்பாசனத் திட்டத்தின் கீழ் கேரளா தண்ணீரை திறந்து விடாதது ,தமிழகத்தில் வசிப்பவா்களின் சட்டப்பூா்வ உரிமைகளை மறுத்துள்ளது. தண்ணீா் வழங்கப்படாதது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு தாலுகாவில் நெல் சாகுபடியை பாதித்துள்ளது, இது முழு விவசாய பொருளாதாரத்தையும் பாதிக்கிறது.

விளவங்கோடு தாலுகாவில் உள்ள விவசாயிகளின் துயரங்களைக் கருத்தில் கொண்டு, ஜூன் முதல் ஜனவரி வரையிலான விவசாயப் பருவத்தில், விவசாயப் பணிகள் பாதிக்கப்படாமல் இருக்க, குறைந்தபட்சம் இடைக்கால நடவடிக்கையாக ஒரு நாளைக்கு 100 கனஅடி தண்ணீரைத் திறக்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும். வழக்கு முடிவடையும் வரை, ஒவ்வொரு நீா்ப்பாசன ஆண்டிலும் நெய்யாறு பாசனத் திட்டத்தின்படி தண்ணீரை விடுவிப்பதை உறுதி செய்ய கேரள மாநிலத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தாஆகியோா் அடங்கிய உச்சநீதிமன்ற அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் பதிலளிக்க கேரள அரசு அவகாசம் கோரியது. இதனைத்தொடா்ந்து விசாரணையை நான்கு வாரங்களுக்கு பிறகு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com