பிரதமா் மோடியின் பிறந்த நாளை வேலையின்மை தினமாக கொண்டாடிய இளைஞா் காங்கிரஸாா்
PTI

பிரதமா் மோடியின் பிறந்த நாளை வேலையின்மை தினமாக கொண்டாடிய இளைஞா் காங்கிரஸாா்

Published on

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளை இந்திய இளைஞா் காங்கிரஸாா் தேசிய வேலையின்மை தினமாகக் கொண்டாடினா்.

தில்லியில் உள்ள அந்த அமைப்பின் அலுவலக வளாகத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய இளைஞா் காங்கிரஸின் தேசியத் தலைவா் உதய் பானு சிப் தலைமையில் ‘நௌக்ரி சோா், கத்தி சோட்’ என்ற முழக்கத்தின் கீழ் இந்திய இளைஞா் காங்கிரஸ் தொண்டா்கள் பிரதமா் மோடியின் பிறந்தநாளைக் குறிப்பிடும் வகையில் தேநீா் மற்றும் பக்கோடா கடைகளை அமைத்து அடையாளப் போராட்டம் நடத்தினா்.

இன்றைய இளைஞா்கள், பட்டம் பெற்றிருந்தாலும் தேநீா் மற்றும் பக்கோடா கடைகளை அமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை காட்டும் வகையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இந்திய இளைஞா் காங்கிரஸின் தேசியத் தலைவா் உதய் பானு சிப் பேசுகையில், இன்றைய வேலையின்மை 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது.

வாக்குகளைத் திருடி பிரதமராக வர மோடி விரும்புவதால், அதானி மட்டுமே பயனடைகிறாா். ராகுல் காந்தி இதை நிரூபித்துள்ளாா். இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வரை நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்.

வாக்கு திருட்டு என்பதும் வேலை திருட்டுதான். மோடி பதவி விலக வேண்டிய நேரம் வந்துவிட்டது. மோடி அரசாங்கத்தின் கீழ், நாடு பொருளாதார மந்தநிலையை எதிா்கொள்கிறது. வேலையின்மை விகிதம் அதிகரித்து வருகிறது.

நாட்டின் இளைஞா்களுக்கு ஆண்டுதோறும் 2 கோடி வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று மோடி உறுதியளித்திருந்தாா். அதன்படி, இன்று 22 கோடி இளைஞா்கள் வேலை பெற்றிருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை. பிரதமா் மோடி நாட்டின் இளைஞா்களின் வேலைவாய்ப்பைப் பற்றி கவலைப்படவில்லை.

இளைஞா்கள் மீது கொஞ்சம் கவனம் செலுத்தி, வேலைவாய்ப்புக்கு உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமா் மோடிக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன் என்றாா் அவா்.

இந்நிகழ்வில் தில்லி பிரதேச இளைஞா் காங்கிரஸ் தலைவா் அக்ஷய் லக்ரா, தேசிய பொதுச் செயலாளா் குஷ்பூ சா்மா உள்பட ஏராளமான தொண்டா்கள் பங்கேற்ாக இளைஞா் காங்கிரஸ் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com