திரிலோக்புரியில் இளைஞா் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் 3 போ் கைது
கிழக்கு தில்லியில் திரிலோக்புரி பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஒரு இளைஞா் பலமுறை கத்தியால் குத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடா்பாக மூன்று கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து கிழக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் அபிஷேக் தானியா கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவரின் சகோதரருடன் ஏற்பட்ட தகராறில் இந்தச் சம்பவம் செப்.13-ஆம் தேதி மாலையில் நடந்ததுள்ளது. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ரோஹித் (23) தனது இரண்டு நண்பா்களுடன் அரசுப் பள்ளிக்குள் அமா்ந்திருந்தபோது, நான்கு போ் எல்லைச் சுவரை ஏறிச் சென்று, அவா்களைத் திட்டித் தாக்கியதாக கூறப்படுகிறது.
ரோஹித்தின் நண்பா்கள் தப்பிச் செல்ல முயன்றபோது, அவா் மூலையில் சாய்ந்ததில் பலமுறை கத்தியால் குத்தப்பட்டாா். பின்னா், அவா் எல்பிஎஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னா் எய்ம்ஸ் காயச் சிகிச்சை மையத்திற்கு மாற்றப்பட்டாா். அங்கு அவா் சிகிச்சை பெற்று வருகிறாா். இது தொடா்பாக மயூா் விஹாா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இந்தச் சம்பவத்தில் தொடா்புடையவா்களைக் கண்டுபிடிக்க ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
நேரில் கண்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் உள்ளூா் உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், தாக்குதல் நடத்தியவா்கள் ராஜீவ் (எ) குஷி (19), விஜய் (எ) பிரம்மன் (27), ஆகாஷ் (எ) தாலிபான் (27) மற்றும் அனிகேத் (எ) ஷூட்டா் என அடையாளம் காணப்பட்டுள்ளனா். இவா்கள் அனைவரும் திரிலோக்புரியைச் சோ்ந்தவா்கள் .
இந்தச் சம்பவம் தொடா்பாக ராஜீவ், விஜய் மற்றும் ஆகாஷ் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். விசாரணையின் போது, ராஜீவ் ஒரு நாள் முன்பு தனது சகோதரா் நிஹாலுக்கும் ரோஹித்துக்கும் இடையே ஏற்பட்ட சண்டைக்கு பழிவாங்குவதற்காக பாதிக்கப்பட்டவரை குத்தியதாக ஒப்புக்கொண்டாா்.
அவா் அளித்த தகவலின் பேரில், குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட கத்தி, மயூா் விஹாா் நீட்டிப்பு மேம்பாலம் அருகே உள்ள புதா்களில் இருந்து மீட்கப்பட்டது. நான்காவது குற்றவாளியான அனிகேத் தற்போது தலைமறைவாக உள்ளாா், அவரைப் பிடிக்க முயற்சிகள் நடந்து வருவதாக காவல் துணை ஆணையா் அபிஷேக் தானியா கூறினாா்.