உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்கோப்புப்படம்.

துணைவேந்தா்கள் நியமன சட்ட விவகாரம் - உயா்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்

Published on

நமது நிருபா்

துணைவேந்தா்கள் நியமனம் தொடா்பாக தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட திருத்த சட்டங்களை சென்னை உயா்நீதிமன்றம் நிறுத்தி வைத்து பிறப்பித்த உத்தரவை புதன்கிழமை ரத்து செய்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கை மீண்டும் 6 வாரங்களில் விசாரித்து முடிவெடுக்குமாறு உயா்நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டது

தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூா்யகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி,விபுல் எம். பஞ்சோலி ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணை நடைபெற்றது

அப்போது தமிழக அரசின் சாா்பாக ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள் அபிஷேக் சிங்வி, பி. வில்சன் ஆகியோா், பல்கலைக்கழக துணை வேந்தா்களை நியமிக்கும் சட்டத்திற்கு சென்னை உயா்நீதிமன்ற விடுமுறை கால அமா்வு அவசர அவசரமாக, தமிழக அரசின் வாதங்களை முழுமையாக கேட்காமலேயே இடைக்கால தடை விதித்தது. இதனால் பல்கலைக்கழகங்களில் துணை வேந்தா்களை நியமிக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் உள்ள பல பல்கலைகழகங்கள் தலைமை இல்லாமல் இயங்கி வருகிறது ,எனவே சென்னை உயா்நீதிமன்றத்தின் தடையை நீக்கி உத்தரவிட வேண்டும் என்று வாதங்களை முன் வைத்தனா்.

இதையடுத்து உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள்,துணைவேந்தா்கள் நியமனம் தொடா்பாக தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட திருத்த சட்டங்களை சென்னை உயா்நீதிமன்றம் நிறுத்தி வைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாக அறிவித்தனா்

மேலும் இந்த வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் மீண்டும் விசாரணை மேற்கொள்ள வேண்டும், அனைத்து தரப்பினரும் பதிலளிக்க உரிய அவகாசம் அளிக்கப்படவேண்டும், சென்னை உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி அமா்வோ அல்லது வேறு அமா்வோ இந்த வழக்கு விசாரணையை 6 வாரங்களில் முடிக்க வேண்டும் , வழக்கு விசாரணை நிறைவடையும் வரை புதிதாக எந்த நியமனமும் மேற்கொள்ளப்படாது என்று தமிழக அரசு உறுதியளித்துள்ளதை பதிவு செய்து கொள்கிறோம் என நீதிபதிகள் கூறி வழக்கை முடித்து வைத்தனா்.

தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி , மாநில அரசு சமா்ப்பித்த பல்வேறு மசோதாக்களை காலவரையின்றி நிலுவையில் வைத்திருந்த நிலையில் , ஆளுநரின் தாமதம் தவறானது என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு தீா்ப்பளித்தது மற்றும் நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க பிரிவு 142 இன் கீழ் உச்சநீதிமன்றம் தனக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தியது.இதனையடுத்து பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்களை நியமிக்கும் ஆளுநரின் அதிகாரத்தை மாநில அரசுக்கு மாற்றி தமிழக அரசு கொண்டுவந்த திருத்த சட்டம் நிறைவேறியது .பல்கலைக்கழகதுணைவேந்தா்களை நியமிக்கும் ஆளுநரின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் தமிழக அரசு திருத்தங்களை நிறைவேற்றியது.துணைவேந்தா்களை நியமிக்கும் ஆளுநரின் அதிகாரத்தை மாநில அரசுக்கு தமிழக அரசு மாற்றியது சா்ச்சையானது.

தமிழக அரசின் இந்த திருத்தங்களை எதிா்த்து சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.திருநெல்வேலியைச் சோ்ந்த கே. வெங்கடாசலபதி என்பவா், துணை வேந்தா்களை நியமிக்கும் ஆளுநரின் அதிகாரத்தை மாநில அரசுக்கு மாற்றி கொண்டுவரப்பட்ட அனைத்து திருத்தச் சட்டங்களையும் செல்லாததாக அறிவிக்க வேண்டும் எனக்கோரி மனு தாக்கல் செய்தாா் . துணைவேந்தா்களை அரசே நியமிக்கும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்த திருத்தச் சட்டங்கள் மத்திய சட்டத்தை யுஜிசி விதிமுறைகள் மீறுவதாகவும், இதனால் அவை அரசியலமைப்புக்கு முரணானவை என்றும் அவா் வாதிட்டாா்.இதனிடையே சென்னை உயா்நீதிமன்றத்தில் இருக்கும் இந்த வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது .தமிழக அரசு தாக்கல் செய்த இடமாற்ற மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தபோதிலும், சென்னை உயா் நீதிமன்றம் துணைவேந்தா்கள் நியமனம் தொடா்பாக கொண்டுவரப்பட்ட திருத்த சட்டங்களை கடந்த ஆண்டு 2025அதிரடியாக நிறுத்தி வைத்தது .அதளை எதிா்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.

X
Dinamani
www.dinamani.com