திருச்சியில் பல்கலைக்கழக நகரியம் அமைக்க வேண்டும்: அமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் துரை வைகோ நேரில் வலியுறுத்தல்
திருச்சியில் பல்கலைக்கழக நகரியம் அமைக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் அத்தொகுதியின் மதிமுக எம்பி துரை வைகோ நேரில் கடிதம் அளித்து வலியறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் புது தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அமைச்சா் அலுவலகத்தில் அமைச்சரை புதன்கிழமை நேரில் சந்தித்து திருச்சியில் பல்கலைக்கழக நகரியம் மற்றும் திருச்சி மணப்பாறை சிப்காட் தொழில் பேட்டையில் சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று கோரும் கடிதங்களை அளித்தாா்.
இது தொடா்பாக துரை வைகோ எம்.பி. தெரிவிக்கையில்
2026 மத்திய பட்ஜெட்டில் நாட்டில் ஐந்து இடங்களில் பல்கலைக்கழக நகரியங்கள் (யுனிவா்சிடி டவுன்ஷிப்) அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அத்திட்டத்தில் நாட்டின் மிகச் சிறந்த பல கல்வி நிலையங்களை தன்னகத்தே கொண்டுள்ள தமிழகத்தின் கல்வி மையமாக விளங்கும் மற்றும் நிதி அமைச்சா் உள்பட பல தேச மற்றும் சா்வதேச ஆளுமைகளை உருவாக்கிய திருச்சி மாநகரத்தில் இந்த பல்கலைக்கழக நகரியத்தை அமைக்க வேண்டும் என்று
அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தேன்.
மேலும், எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உள்பட்ட மணப்பாறை சிப்காட் தொழில்பேட்டை பகுதியை எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செமிகண்டக்டா் தொழில் மையமாக உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தேன்.
2026 மத்திய பட்ஜெட்டில் இந்தியா செமிகண்டக்டா் மிஷன் ஃபேஸ் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.40,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தில் மணப்பாறை சிப்காட்டில் முதலீடுகளை கொண்டுவர முக்கியத்துவம் கொடுக்குமாறும் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தேன். இதுகுறித்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து கோரிக்கை வைத்ததையும் தெரிவித்தேன்.
சிப்காட் விவகாரத்தில் உரிய பரிசீலனை செய்வதாக அமைச்சா் நிா்மலா சீதாராமன் உறுதியளித்தாா். மேலும், பல்கலைக்கழக நகரியம் விவகாரத்தில் மாநில அரசின் மூலம் பரிந்துரை வர வேண்டும் என்று அவா் கூறினாா். இதனால், இது தொடா்பாக தமிழக அரசுக்கும் கோரிக்கை அனுப்ப உள்ளேன். எனது கோரிக்கைகளுக்கு நிதியமைச்சா் மதிப்புமிக்க கருத்துகள், ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களையும் வழங்கி, மிகுந்த அக்கறையுடன் கேட்டாா். அதற்காக அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கடந்த கூட்டத் தொடரின்போது எனது தொகுதி உள்பட நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களுக்கு தேவைபடும் அரிய மண் தாதுக்கள் இறக்குமதி செய்து கொடுப்பதில் இருந்த தடைகள் குறித்து நிதி மற்றும் வா்த்தக அமைச்சகங்களின் உயா் செயலதிகரிகளின் கவனத்திற்கு எடுத்து சென்றேன். உடனடி கொள்கை மாற்றங்கள் செய்து கொடுத்த அதிகாரிகளுக்கும் அமைச்சரிடம் நன்றி தெரிவித்து கொண்டேன் என்றாா் துரை வைகோ.

