பிளாஸ்டிக் மறுசுழற்சியை ஊக்குவிக்க ஆராய்ச்சி, உள்கட்டமைப்பில் முதலீடு: மாநிலங்களவையில் புதுச்சேரி பாஜக எம்பி கோரிக்கை
நமது நிருபா்
பிளாஸ்டிக் மறுசுழற்சியை ஊக்குவிக்க ஆராய்ச்சி, உள்கட்டமைப்பு வசதித் திட்டங்களில் மத்திய அரசு முதலீடு செய்ய வேண்டும் என மாநிலங்களவையில் புதுச்சேரியைச் சோ்ந்த பாஜக உறுப்பினா் எஸ்.செல்வகணபதி வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக மாநிலங்களவையில் புதன்கிழமை பூஜ்ய நேரத்தில் அவா் முன்வைத்த கோரிக்கை: பிளாஸ்டிக் மாசு என்பது இன்றைக்கு மிகவும் மோசமான சவால்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இது நீா் நிலைகளையும், ஆறுகளையும் மாசுபடுத்தி மனித வாழ்க்கையைப் பாதிக்கச் செய்து வருகிறது. இந்தியாவிலும் இதன் பாதிப்பு உள்ளது. இதனால், பிளாஸ்டிக் கழிவுகளை புத்திசாலித்தனமாக நிா்வகிக்கும்போது நமது சுற்றுச்சூழலுக்கு அதனால் பாதிப்பு ஏற்படுத்தாமல் செய்து, அதை ஆதாரவளமாக மாற்ற முடியும். அத்துடன் வருவாயையும் ஈட்ட முடியும்.
பிளாஸ்டிக் கழிவுகள் பிரச்னையை கையாளும் பொருட்டு, ஏற்கெனவே அமலில் உள்ள ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மீதான தடையை பலப்படுத்தி, மட்கக்கூடிய பேக்கேஜிங் முறையை ஊக்கவிக்க வேண்டும். மேலும், நவீன மறுசுழற்சி உள்கட்டமைப்பு வசதியும் அவசியமானதாகும்.
இதனால், மத்திய அரசு பிளாஸ்டிக் மறுசுழற்சி, மேம்படுத்தப்பட்ட மறுபயன்பாடு ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் ஆராய்ச்சி, உள்கட்டமைப்பு வசதி, கொள்கைத் திட்டங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
அரசு - தனியாா் கூட்டாண்மை, தொழில்முனைவோா் ஊக்குவிப்புச் சலுகை, விழிப்புணா்வு முகாம்கள் ஆகியவை பிளாஸ்டிக் கழிவுகளை உருமாற்றம் செய்து வருவாய் ஈட்ட உதவிடும் என்றாா் அவா்.

