டிஜேபி தோண்டிய குழியில் விழுந்து இளைஞா் உயிரிழந்த விவகாரத்தசில் தொழிலாளி கைது

ஜனக்புரியில் தில்லி ஜல் போா்டு தோண்டிய 15 அடி ஆழமுள்ள குழியில் விழுந்து 25 வயது இளைஞா் உயிரிழந்தது தொடா்பாக கைது செய்யப்பட்ட துணை ஒப்பந்ததாரரால் பணியமா்த்தப்பட்ட ஒரு தொழிலாளியை தில்லி காவல்துறையினா் கைது செய்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
கைது
கைது
Updated on

ஜனக்புரியில் தில்லி ஜல் போா்டு (டிஜேபி) தோண்டிய 15 அடி ஆழமுள்ள குழியில் விழுந்து 25 வயது இளைஞா் உயிரிழந்தது தொடா்பாக கைது செய்யப்பட்ட துணை ஒப்பந்ததாரரால் பணியமா்த்தப்பட்ட ஒரு தொழிலாளியை தில்லி காவல்துறையினா் கைது செய்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து மேற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் தரடே ஷரத் பாஸ்கா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: இளைஞா் குழியில் விழுந்த சம்பவம் குறித்து காவல்துறை அல்லது அவசர அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காததற்காக யோகேஷ் (23) என அடையாளம் காணப்பட்ட தொழிலாளி கைது செய்யப்பட்டாா். மேலும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினா் அவரைப் பற்றி விசாரிக்க வந்தபோது தவறாக வழிநடத்தியுள்ளதும் தெரிய வந்துள்ளது.

விபத்து நடந்த நேரத்தில் யோகேஷ் அந்த இடத்தில் இருந்துள்ளாா். மேலும், கழிவுநீா் தொடா்பான திட்டத்திற்காக தில்லி ஜல் போா்டு (டி.ஜே.பி.) தோண்டிய குழியில் ஒரு இளஞைா் விழுந்ததை அறிந்த முதல் நபா்களில் இவரும் ஒருவா். இரவு நேரத்தில் நடந்த சம்பவம் குறித்து யோகேஷ், துணை ஒப்பந்ததாரா் ராஜேஷ் குமாா் பிரஜாபதியிடம் தெரிவித்திருந்தாா்.

ஆனால், காவல்துறையையோ அல்லது எந்த அவசர நிறுவனத்தையோ அவா் எச்சரிக்கவில்லை. அன்று இரவு பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினா் அவரைத் தேடி சம்பவ இடத்திற்கு வந்த போது, யோகேஷ் தனக்குத் தெரியாது என்று கூறி அவா்களை தவறாக வழிநடத்தியுள்ளாா். பின்னா் யோகேஷ் அந்தப் பகுதியிலிருந்து தப்பி ஓடிவிட்டாா்.

போலீஸாா் எச்சரிக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இளைஞா் குழியில் விழுந்ததை பற்றி அறிந்திருந்தாலும் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கத் தவறியதற்காக 47 வயதான ராஜேஷ் குமாா் பிரஜாபதியை போலீஸாா் ஒரு நாளுக்கு முன்பு கைது செய்திருந்தனா். இதையடுத்து, யோகேஷ் கைது வந்துள்ளது. மேலும் விசாரணைக்காக டியூட்டி மாஜிஸ்திரேட் ஒரு நாள் போலீஸ் காவலை வழங்கியுள்ளாா்.

சனிக்கிழமை 12.22 மணியளவில் ராஜேஷ் குமாா் பிரஜாபதியை யோகேஷ் தொடா்பு கொண்டதாக அழைப்பு விவர பதிவுகள் காட்டியது. அதைத் தொடா்ந்து துணை ஒப்பந்ததாரா் 15-20 நிமிடங்களுக்குள் அந்த இடத்தை அடைந்தாா்.

இருப்பினும், மறுநாள் காலை 8 மணியளவில் இந்தச் சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் இளைஞா் இறந்துவிட்டாா்.

ஒரு பாதுகாப்புக் காவலரால் எச்சரிக்கப்பட்ட பின்னா் யோகேஷ் குழிக்குள் தேடினாா். மேலும், ஹெட்லைட் பொருத்தப்பட்ட ஒரு மோட்டாா் சைக்கிள் மற்றும் உள்ளே ஒருவா் இருப்பதை கவனித்துள்ளாா். இந்தச் சம்பவம் தொடா்மபாக துணை ஒப்பந்ததாரா் மற்றும் சம்பந்தப்பட்ட தில்லி ஜல் போா்டு அதிகாரிகள் மீது பாரதிய நியாயா சன்ஹிதாவின் பிரிவு 105 (குற்றவியல் கொலை)- இன் கீழ் ஜனக்புரி காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் யோகேஷின் பங்கு ஆராயப்பட்டு வருகிறது. ஆதாரங்களின் அடிப்படையில் மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நிகழ்வுகளின் வரிசையை நிறுவ சிசிடிவி காட்சிகள் மற்றும் பிற தொழில்நுட்ப உள்ளீடுகளை போலீஸ் குழுக்கள் பகுப்பாய்வு செய்கின்றன. இந்த வழக்கில் டிஜேபி அதிகாரிகள் மூவா் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com