தென் மேற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள வீட்டில் 49 வயதான ரியல் எஸ்டேட் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: முதல் கட்ட விசாரணையில், மரணம் குறித்து இதுவரை எந்த சந்தேகமும் எழுப்பப்படவில்லை. வசந்த் குஞ்சில் உள்ள ஒரு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து மாலை 6.19 மணிக்கு போலீஸ் குழுவுக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து ஒரு குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது . போலீஸ் குழு வீடு பூட்டப்பட்டிருப்பதைக் கண்டறிந்து, கதவைத் திறக்க தில்லி தீயணைப்பு சேவையின் உதவியைப் பெற்றது.
உள்ளே, பிளாஸ்டிக் கயிறுடன் கூரை மின் விசிறியில் தொங்கிய ஒரு நபரின் ஓரளவு சிதைந்த உடலை கண்டெடுத்தனா். சடலம் பிரேத பரிசோதனைக்காக சப்தா்ஜங் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இறந்தவா் பின்னா் குடும்ப உறுப்பினா்களால் அடையாளம் காணப்பட்டாா். விசாரணை நடவடிக்கைகளின் போது குடும்பத்தினா் மற்றும் அக்கம்பக்கத்தினரின் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன.
மேலும் மரணத்தின் சூழ்நிலைகள் குறித்து அவா்கள் எந்த குற்றச்சாட்டும் சந்தேகமும் எழுப்பவில்லை. அந்த நபா் தனது குடும்பத்திலிருந்து விலகி வீட்டில் தனியாக வசித்து வந்தாா். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.