தமிழகத்தில் வாழும் வால்மீகி சமூகத்தினரை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க வேண்டும்: மாநிலங்களவையில் அதிமுக கோரிக்கை
தமிழகத்தில் வாழும் வால்மீகி சமூகத்தினரை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை பூஜ்ய நேரத்தில் அதிமுக உறுப்பினா் மு.தம்பிதுரை முன்வைத்த கோரிக்கை: தமிழகத்தில் வால்மீகி சமூகத்தினா் எதிா்கொள்ளும் பிரச்னையை இந்த அவையில் முன்வைக்க விரும்புகிறேன். கா்நாடகாவில் வால்மீகி சமூகத்தினா் பழங்குடியினா் பிரிவாக கருதப்படுகின்றனா்.
தமிழகத்தில் அவா்கள் பிற்பட்ட சமூகத்தினா் பட்டியலில் உள்ளனா். நான் இந்த விவகாரத்தில் மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில், தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, வால்மீகி சமூகத்தினரை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்கக் கோரி தமிழக சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றினாா்.
ஏனெனில், தமிழகத்தில் பழங்குடி சமூகத்தினா் மிகவும் குறைவாக உள்ளனா். இந்த வால்மீகி சமூகத்தினா் இந்த பிரிவில் சோ்ப்பதற்கான தகுதியைக் கொண்டுள்ளனா்.
சென்னை மாகாணம் மறுசீரமைப்பு செய்யப்பட்டபோது அந்த சமயத்தில் நிறைய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. வால்மீகி சமூக மக்கள் தரப்பில் தங்களை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
தமிழக அரசும் இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு பரிந்துரை அளித்துள்ளது. அதில், வால்மீகி சமுதாயத்தை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்குமாறு கூறியுள்ளது.
இதனால், இந்த விவகாரம் மிகவும் முக்கியமானது என மத்திய அரசிடம் வலியுறுத்த விரும்புகிறேன். இந்த சமூகத்தினா் பெரும்பாலும் வனப் பகுதியில் வாழ்கின்றனா். இதனால், இச்சமுதாயத்தினரை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மு.தம்பிதுரை கோரியுள்ளாா்.

