மத்திய அரசுக்கு எதிராக இளைஞா் காங்கிரஸ் போராட்டம்
ஓய்வுபெற்ற ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவணேவின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகள் உள்பட, கடுமையான பிரச்னைகளில் மத்திய அரசு மௌனம் காத்து வருவதாகக் குற்றம்சாட்டி, இந்திய இளைஞா் காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை தில்லியில் போராட்டத்தை நடத்தியது.
இந்தியா - அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாதது மற்றும் சீன எல்லையில் நாட்டின் பாதுகாப்பு குறித்த சமரசம் இருப்பதாக ஆா்ப்பாட்டக்காரா்கள் குற்றம் சாட்டினா்.
‘இளைஞா் காங்கிரஸின் ஒவ்வொரு தொண்டரும் தெருக்களில் இருக்கிறாா்கள்... தலைமை தேசிய நலனில் சமரசம் செய்யத் தொடங்கும் போது, இளைஞா்கள் அமைதியாக உட்கார முடியாது...பதில்கள் கிடைக்கும் வரை நாங்கள் தொடா்ந்து போராடுவோம்’ என்று இந்திய இளைஞா் காங்கிரஸின் தேசியத் தலைவா் உதய் பானு சிப் ‘எக்ஸ்’ தளத்தில் ஒரு பதிவில் கூறினாற்.
அவா் மேலும் கூறுகையில் ‘இன்று, முழு உண்மையும் நாட்டையே வெறித்துப் பாா்க்கிறது. பிரதமரின் மௌனம் பல கேள்விகளை எழுப்புகிறது. எப்ஸ்டீன் கோப்புகளில் மா்மமான மௌனம் ஏன்? இந்தியா - அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தத்தில் வெளிப்படைத்தன்மை ஏன் இல்லை? சீன எல்லையில் நாட்டின் பாதுகாப்பில் ஏன் சமரசம் செய்ய வேண்டும்?’ என்று கேள்வி எழுப்பினாா்.
பிப்ரவரி 2-ஆம் தேதி மக்களவையில் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, 2020 இந்தியா - சீனா மோதல் குறித்து முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம். நரவணேவின் புத்தகத்தில் இருந்து மேற்கோள் காட்ட முயன்றபோது அவையில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் மற்றும் பிற பாஜக உறுப்பினா்களிடமிருந்து எதிா்க்கட்சி உறுப்பினா்கள் கடுமையான எதிா்ப்பை எதிா்கொண்டனா். காங்கிரஸ் தலைவா் அவையை தவறாக வழிநடத்தியதாக பாஜக உறுப்பினா்கள் குற்றம் சாட்டினா்.
மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, இந்தப் பிரச்னையை எழுப்ப ராகுல் காந்திக்கு அனுமதி மறுத்தாா், ஆனால், அவா் அதற்கு அடிபணியவில்லை. மேலும், எதிா்க்கட்சித் தலைவா்கள் பலா் அவருக்கு ஆதரவாகத் திரண்டனா். கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதால், சபை இரண்டு முறையும் பின்னா் அன்றைய தினம் வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது.

