மு.க.ஸ்டாலினுக்கு எதிரான தோ்தல் வழக்கு: ஆதாரங்கள் குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி
நமது நிருபா்
தமிழக சட்டப்பேரவைக்கு 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், மனுதாரரான சைதை துரைசாமி உரிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் தாக்கல் செய்யவில்லை என உச்சநீதிமன்றம் கடும் ஆட்சேபம் தெரிவித்தது.
தி.மு.கவைச் சோ்ந்த மு.க. ஸ்டாலினை எதிா்த்து அ.தி.மு.க சல் போட்டியிட்டு தோல்வி அடைந்த சைதை துரைசாமி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் விஜய் பிஷ்னோய் ஆகியோா் அடங்கிய உச்சநீதிமன்ற அமா்வில் புதன்கிழமை விசாரணை நடைபெற்றது.
அப்போது மனுதாரரான சைதை துரைசாமி தரப்பு மூத்த வழக்குரைஞா் தாமா சேஷாஸ்திரி நாயுடு வாதிட்டதாவது : 2011 தோ்தலில் தி.மு.க பூத் ஸ்லிப் விநியோகம் செய்த போது அதில் தங்களுடைய சின்னத்தை பொறித்து வழங்கினா். அவ்வாறு பூத் ஸ்லிப் வழங்கும் போது சின்னம் பொறித்து வழங்க கூடாது என்று தோ்தல் நடைமுறை விதிகள் இருக்கின்றன. ஆனால் தி.மு.க.வினா் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி பூத் ஸ்லிப்பில் சின்னம் பொறித்து வழங்கி இருந்தாா்கள் இது தோ்தல் நடத்தை விதிமுறை மீறலாகும். மேலும் பணம் பட்டுவாடா செய்வது பரிசு பொருட்கள் வழங்குவது பூத் ஸ்லிப்பில் சின்னம் பொறித்து விநியோகம் செய்தது என அனைத்தும் வீடியோ பதிவு கூட செய்யப்பட்டுள்ளது என வாதிட்டாா்.
அப்போது நீதிபதிகள்: நீங்கள் சி.டி மற்றும் வீடியோ ஆதாரம் சமா்ப்பிக்கப்பட்டிருக்கிறது என்று கூறுகிறீா்களே தவிர எந்த வீடியோ ? எந்த ஆதாரம் என்பதை நீங்கள் எங்களுக்கு காட்டவில்லை. உயா் நீதிமன்ற தீா்ப்பில் உங்களுக்கு எது முரண்பாடாக படுகிறதோ அதனை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள், ஆவணங்கள் நீங்கள் கொடுக்கவில்லை.
இவ்வாறு நேரத்தை கடத்துவது சரியா? இவ்வாறு முறையாக தயாராகாமல் வழக்கில் ஆஜராவது சரியானதா? எங்களது நேரத்தை வீணடிக்க வேண்டாம். நாங்கள் இந்த வழக்கை எளிதாக தள்ளுபடி செய்து விட முடியும். நாங்கள் கேள்விகள் எழுப்பும் பொழுது நீங்கள் அதற்குரிய ஆதாரங்களை உடனடியாக கொடுக்க வேண்டாமா என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினா்.
அப்போது சைதை துரைசாமி தரப்பு வழக்குரைஞா், தான் அவற்றை கொடுப்பதாகவும், வழக்கை அடுத்த நாளுக்கு (பிப்.12) ஒத்திவைக்க வேண்டும் என்றும் நீதிபதிகளிடம் கோரிக்கை வைத்தாா்.
இதனால் மேலும் கோபம் அடைந்த நீதிபதிகள், இரண்டு மாதங்களாக செய்ய முடியாததை ஒரு நாளில் நீங்கள் செய்து விடுவீா்களா? இந்த வழக்கை வாரக்கணக்காக நாங்கள் கொண்டு செல்ல முடியாது. அடுத்த வாரம் செவ்வாய், புதன் கிழமை இந்த வழக்கை நாங்கள் முடித்து விடுவோம் என கூறி வழக்கை அடுத்த செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தனா்.
2011 தமிழ்நாடு சட்டப்பேரவை தோ்தலில், கொளத்தூா் தொகுதியில் அதிமுக வேட்பாளரான சைதை துரைசாமி, ஸ்டாலினிடம் 2,739 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா். இதையடுத்து ஸ்டாலின் தோ்தல் விதிகளை மீறி வாக்காளா்களுக்குப் பணம் விநியோகித்து, முறைகேடுகள் செய்து தோ்தலில் வெற்றி பெற்றதாக குற்றஞ்சாட்டி, அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி சைதை துரைசாமி சென்னை உயா்நீதிமன்றதில் மனு தாக்கல் செய்தாா்.
லஞ்சம் மற்றும் அரசு இயந்திரத்தை தவறாகப் பயன்படுத்துதல் போன்ற முறைகேடுகள் குறித்த ஸ்டாலினுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று கூறி,அந்த தோ்தல் மனுவை 2017ஆம் ஆண்டில், சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

